ஆளுக்கு 2 பிளேடு தருவோம்.. நீங்களே ஷேவ் பண்ணிக்கனும்..கைதிகளுக்கு புது உத்தரவு!
சென்னை: தமிழக சிறைகளில் இனிமேல் கைதிகள் தாங்களே ஷேவ் செய்து கொள்ள வேண்டுமாம்.
இந்தத் திட்டத்தின் மூலம் கைதிகள் சுத்தமாக இருப்பதோடு, பல்வேறு வியாதிகள் பரவுவதையும் தடுக்கலாம் என்று சிறைத்துறை கருதுகிறது.
மேலும் சிறைக் கைதிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க 9 மத்திய சிறைகளுக்கும் தலா 2 கவுன்சலர்களை நியமிக்கவும் சிறைத்துறை திட்டமிட்டுள்ளது.
ஆளுக்கு 2 பிளேடு
கைதிகளுக்கு மாதத்திற்கு 2 டிஸ்போசபிள் பிளேடு தரப்படுமாம். இதை வைத்துக் கொண்டு மாதம் முழுவதும் அவர்கள் ஷேவ் செய்து சுத்தமாக இருக்க வேண்டுமாம்.
திரிபாதி சொல்வது என்ன
இதுகுறித்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஜே.கே.திரிபாதி கூறுகையில், தற்போது சவரத் தொழிலாளர்கள் மூலம் பழைய கத்தியை வைத்து பழைய முறையில் சவரம் செய்யும் முறை இருந்து வருகிறது. இது பல பிரச்சினைகளுக்கு காரணமாகி விடுகிறது. மேலும் கைதிகளும் சரிவர முடி வெட்டிக் கொள்ள, ஷேவ் செய்ய சங்கடப்படுகிறார்கள்.
அவர்களே
எனவேதான் டிஸ்போசபிள் பிளேடு தர முடிவு செய்துள்ளோம். எனவே இனிமேல் கைதிகள் அவர்களே ஷேவ் செய்து கொள்ளலாம். மாதம் 2 பிளேடு தரப்படும்.
பிளேடு வாங்க டெண்டர்
பிளேடு வாங்க விரைவில் டெண்டர் விடப்படும்.
அத வச்சு அறுத்துட்டா...
கைதிகளுக்கு தரப்படும் பிளேடை அவர்கள் தவறாகப் பயன்படுத்தி, ஆயுதம் போல பாவித்து விபரீத செயலில் ஈடுபடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் பிளேடுகளின் எண்ணிக்கையும் தினசரி கணக்கெடுக்கப்படும் என்றார் அவர்.
பிளேடு திட்டத்துக்கு ரூ. 43 லட்சம்
பிளேடு திட்டத்துக்கு ரூ. 43 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாம். மேலும் ஒரு கைதிக்கு வருடத்திற்கு இதன் மூலம் ரூ. 336 செலவாகுமாம். தமிழகத்தில் மொத்தம் 13,000 கைதிகள் உள்ளனராம்.