கோவை குட்கா விவகாரம்: போராட்டம் நடத்திய திமுக எம்எல்ஏவுக்கு முன்ஜாமீன்
குட்கா ஆலை விவகாரத்தில் போராட்டம் நடத்திய கார்த்திக்கிற்கு முன்ஜாமீன் கிடைத்துள்ளது.
கோவை: கோவையில் உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் குட்கா பறிமுதல் வழக்கில் திமுக எம்எல்ஏ கார்த்திக்கிற்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சூலூரில் பகுதியில் உள்ள கண்ணம்பாளையத்தில் ஒரு தனியார் குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, பான்பராக் மற்றும் போதை தரும் குட்கா உற்பத்தி செய்யும் மிகப் பெரிய தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு போலீஸார் அந்த ஆலையில் விடிய விடிய தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, 650 கிலோ எடை கொண்ட புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 450 கிலோ மூலப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன், ஆலையில் பணியாற்றிவந்த ரகுராமன், அஜய், ராம்தேவ், சோஜிராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், குட்கா விவகாரத்திற்கு எதிராக கோவை தி.மு.க-வினர் சோதனை நடைபெற்ற தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க-வினர் மீது சூலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பொதுஇடத்தில் கூடுதல், அனுமதியின்றி போராட்டம் நடத்துதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், கண்ணம்பாளையம் முன்னாள் தலைவர் தளபதி முருகேசன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், சண்முகம், சுரேஷ் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் நள்ளிரவில் கைது செய்தனர். மேலும், எம்.எல்.ஏ., கார்த்தியையும் கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால், கார்த்தி எங்கே இருக்கிறார் என்று இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில், முன்ஜாமீன் வழங்க கோரி எம்எல்ஏ கார்த்திக், மாதாப்பூர் தங்கராஜ் ஆகியோர் தரப்பில் விடுமுறை கால நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்எல்ஏ கார்த்தி, தங்கராஜ் ஆகியோருக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.