மின்மிகை மாநிலத்தில் மின்வெட்டா? சமாளிக்க முடியுமா.. அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி
மின்வெட்டுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுகிறதா என்றும், அப்படியென்றால், அதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.
காற்றாலை மின் உற்பத்தி வேண்டுமென்றே பயன்படுத்தப்படுவதில்லை என்று தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். அப்போது நீதிபதி தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.
அப்போது நீதிபதி, "காற்றாலை மின்சாரத்தை ஏன் முழுமையாக பயன்படுத்துவதில்லை? மின் மிகை மாநிலமான தமிழகத்தில் மின்வெட்டு நிலவுகிறதா? அப்படி மின்பற்றாக்குறை இருந்தால் அதனை போக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?
தொழில் நிறுவனங்கள் பெருகிவருகிறது. எதிர்காலத்தில் இதற்கான மின்தேவையை நாம் சமாளிக்க முடியுமா? அறிவிக்கப்படாத மின்வெட்டால் குழந்தைகள், பெரியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதுபோன்ற மின்வெட்டு நேரத்தில் காற்றாலை மின்சாரத்தை ஏன் முழுமையாக பயன்படுத்தக்கூடாது? என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்.
பின்னர் இது தொடர்பாக தமிழ்நாடு மின்பகிர்மான கழகத் தலைவர் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்தார்.