சொத்து பிரச்சினை: 2 இளைஞர்கள் சரமாரி வெட்டி படுகொலை: தந்தை-மகன் போலீசில் சரண்
சொத்து பிரச்சினையில் 2 பேரை கொலை செய்ததாக தந்தை மகன் போலீசில் சரணடைந்துள்ளனர்.
புவனகிரி: புவனகிரி அருகே சொத்து பிரச்சினை காரணமாக சொந்த அண்ணன் மகன் உட்பட 2 பேரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் 58. இவர் சிங்கப்பூரில் வேலைபார்த்து வருகிறார். அவரது அண்ணன் கணேசனின் மகன் குருசேவ் 28. இவர்கள் இருவருக்கும் நீண்ட காலமாக சொத்து பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து குருசேவ் வந்துள்ளார். சொத்துப்பிரச்சினை சம்பந்தமாக பேச அவரது நண்பர் அபினாஷ் சேர்ந்து குருசேவ் தனது சித்தப்பா விஜயன் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த விஜயனும் அவரது மகன் கோபியும் அரிவாள் மற்றும் இரும்பு கம்பியால் சரமாரியாக வெட்டியும் குத்தியும் உள்ளனர்.
இதில் குருசேவ், மற்றும் அவரது அபினாஷ் இருவரும் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்தனர். இதனையடுத்து விஜயனும் அவரது மகன் கோபியும் புவனகிரி காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.
போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.