திருப்பதி அருகே செம்மரம் வெட்டியதாக 5 தமிழர்கள் கைது..துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் பபரபரப்பு..
திருப்பதி: சந்திரகிரி அருகே வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 5 தமிழர்களை ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சந்திரகிரி அருகே மூங்கில்பட்டு என்னும் இடத்தில் 20 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை வெட்டியதாக சிறப்பு அதிரடிப்படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சிறப்பு அதிரடிப்படை டிஐஜி காந்தாராவ் தலைமையில் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, செம்மரம் வெட்டிய கும்பல் காவலர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் 5 பேர் காயமடைந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வானத்தை நோக்கி அதிரடிப்படையினர் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சிலர் தப்பி ஓடி விட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என திருப்பதி வன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே கடப்பாவில் வாகன சோதனையின் போது 8 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் மற்றும் 4 கார், ஒரு லாரியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். செம்மரம் கடத்தியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.