சென்னை வடபழனியில் குருக்களை கட்டி போட்டு மனைவி படுகொலை: நகைகள் கொள்ளை: மர்மகும்பலுக்கு போலீஸ் வலை
சென்னை வடபழனியில் கணவனை கட்டிப் போட்டு விட்டு அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டார்.
Recommended Video
சென்னை: சென்னை வடபழனியில் குருக்களை கட்டிப் போட்டு விட்டு அவரது மனைவியை மர்மநபர்கள் படுகொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
சென்னை வடபழனி சிவன் கோயிலின் அர்ச்சகராக பணிபுரிந்து வருபவர் பாலகணேஷ் (எ) பிரபு. இவரது மனைவி ஞானபிரியா. இருவரும் வடபழனி சிவன்கோவில் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை வீட்டின் உரிமையாளர் விஜயலஷ்மி, குருக்கள் பாலகணேஷ் வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர் வடபழனி காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளார்.
கை கால்கள் கட்டப்பட்ட நிலையில்
புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு ஞானபிரியா தலையில் பலத்த காயத்துடன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். பாலகணேஷும் வீட்டின் கழிவறையில் கை கால்கள் கட்டப்பட்டு கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை
பின்னர் பாலகணேஷை ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஞானபிரியா உடலை மீட்டு ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர்.
நகை கொள்ளை
இந்நிலையில் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஞானபிரியாவை கட்டிபோட்டுவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
முன்விரோதம் காரணமா
நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் ஞானபிரியாவை மர்மநபர்கள் கொலை செய்தது ஏன் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.