பவானி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து விபத்து: இளம் தம்பதி உட்பட 4 பேர் பலியான சோகம்
பவானி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து விபத்துகுகுள்ளானது. இதில் கணவன் மனைவி உட்பட 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பவானி சாகர்: பாவனி ஆற்றில் பரிசல் கவிழ்ந்ததில் இளம் தம்பதி உட்பட 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பொங்கல் விடுமுறை கொண்டாட பரிசல் பயணம் சென்றபோது விபத்து நேரிட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த 29 வயதான ஜோசப் பவுல்ராஜ் என்பவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது மனைவி ஆஷா ஜெனிபர் மற்றும் திருச்சியை சேர்ந்த உறவினர்கள் ஆனந்த் பிரான்சிஸ், ஜார்ஜ் ஆல்வின் உள்ளிட்ட 6 பேர் பொங்கல் விடுமுறையை கொண்டாடுவதற்காக பாவனிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று மதியம் சென்றார்.
பின்னர் நேற்று மாலை 6 பேரும் அருகில் உள்ள பவானி ஆற்றில் பரிசல் பயணம் செய்தனர். அப்போது திடீரென பரிசல் கவிழ்ந்தது.
இதில் ஜோசப் பவுல்ராஜ் ஆஷா ஜெனிபர்,ஆனந்த் பிரான்சிஸ், ஜார்ஜ் ஆல்வின் ஆகிய 4 பேரும் ஆற்றில் மூழ்கினர். மற்ற இரண்டு பேரும் நீந்தி கரைசேர்ந்தனர்.
அவர்களின் கூச்சலைக் கேட்டு அங்கு திரண்ட கிராம மக்கள் 4 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் 4 பேரும் ஆற்றில் மூழ்கினர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் 4 பேரின் உடல்களையும் மாலை 6.30 மணியளவில் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பொங்கல் விடுமுறையை கொண்டாட சென்ற கணவன் மனைவி உட்பட 4 பேர் ஆற்றில் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.