டிடிவி உட்பட யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வரலாம்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
டிடிவி தினகரன் உட்பட யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வரலாம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்: டி.டி.வி தினகரன் உட்பட யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வரலாம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கி விட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்த அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டோர் தெரிவித்தனர். ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு சசிகலாவை கட்சியில் நீக்கி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும் இதுதொடர்பாக கட்சியில் இரு மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. அமைச்சர் ஓஎஸ் மணியன் எம்பி தம்பிதுரை உள்ளிட்டோர் சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தம்பிதுரை சசி, தினகரனுக்கு ஆதரவு
சசிகலாவும் தினகரனும் விரைவில் அதிமுகவில் இணைவார்கள் என்று தம்பிதுரை கூறியிருந்தார். இது எடப்பாடி தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஜெயக்குமார் எதிர்ப்பு
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜெயக்குமார் சசிகலாவையும் தினகரனையும் மீண்டும் கட்சியில் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். மக்களின் விருப்பப்படியே அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குறினார்.
டிடிவி உட்பட யார் வேண்டுமானாலும்
இந்நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓஎஸ் மணியன் டிடிவி உட்பட யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வரலாம் என தெரிவித்தார். அதிமுக என்னும் தாய்க்கழகத்திற்க யார் வேண்டுமானாலும் திரும்பலாம் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
எடப்பாடி தரப்பு அதிர்ச்சி
தம்பிதுறையை தொடர்ந்து ஓ.எஸ்.மணியனும் தினகரனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது எடப்பாடி தரப்பை அதிர்ச்சியடைய செய்துள்ளது.