தமிழக கிராம மக்களின் அதிகபட்ச மாத வருமானம் ரூ.5,000: சென்சஸ் அடித்த அபாய மணி
சென்னை: தமிழகம் நகர்ப்புறங்களை அதிகம் கொண்ட மாநிலமாக இருந்தாலும், கிராமப்புறங்கள் வளர்ச்சி மிக குறைவாக உள்ளது. நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் தனி நபர் வருமானத்தில் மிகுந்த வித்தியாசம் இருப்பதாக 2011ம் ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பு சொல்கிறது.
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றாலும்கூட, சமூக, பொருளாதார, ஜாதி வாரி கணக்கெடுப்பு, சுதந்திர இந்தியாவில் நடைபெற்றது இதுதான் முதல்முறையாகும். எனவே பல புதிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
நகர்மயம்
தமிழகத்திலுள்ள மொத்த வீடுகள் எண்ணிக்கையில் 42.47 சதவீதம் நகரங்களில் உள்ளன. பெரிய மாநிலங்கள் அடிப்படையில், நகர்மயமாதலில், குஜராத் மற்றும், மகாராஷ்டிராவையும் முந்திச் சென்றுவிட்டது தமிழகம். ஆனால் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் உள்ள இடைவெளியும் கூடிக் கொண்டுதான் செல்கிறது.
அதிகபட்சமே 5 ஆயிரம்தான்
கிராமங்களிலுள்ள 78.08 வீடுகளில், ஒரு நபரின் அதிகபட்ச வருமானமே 5 ஆயிரத்துக்கும் கீழாகத்தான் உள்ளது. 15.49 சதவீதம் வீடுகளில், 5000 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வருவாய் வருகிறது. பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மாத வருவாய் கொண்டோர் எண்ணிக்கை 8.63 சதவீதமாக மட்டுமே உள்ளது.
எஸ்.சிக்கள் நிலை மோசம்
ஆண் துணையின்றி பெண்கள் பராமரிக்கும் குடும்பங்களில் வருவாய் நிலை இன்னும் மோசமாக உள்ளது. 85.58 சதவீத குடும்பங்களில் வருமானம் 5 ஆயிரம் ரூபாய்க்கும் கீழாகவே உள்ளது. 85.10 சதவீதம், தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி) குடும்பங்களில் அதிகபட்ச வருமானம் ரூ.5 ஆயிரத்துக்கும் கீழாகவே உள்ளது.
நிலமே இல்லை
தமிழகத்தில் 55.80 சதவீதம் குடும்பத்தாருக்கு நிலம் இல்லை. கூலி வேலைகள் மூலமே வருவாய் கிடைக்கிறது. எஸ்.சிக்களை எடுத்துக்கொண்டால், அவர்களில் 73.33 சதவீதம் பேருக்கு சொந்த நிலம் இல்லை. ஆனால், நாடு முழுவதுமே இதுபோன்ற டிரெண்ட்தான் உள்ளது. இதில் தமிழகம் தனித்து தெரியவில்லை.
வல்லுநர்கள் பார்வை
பொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் கூறுகையில், "தமிழகத்தில் ஏகப்பட்ட டவுன் பஞ்சாயத்துகள் உள்ளன. இவை நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் கிராமங்களுக்கும் அவற்றுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதை வைத்துதான், அதிகமாக நகர்ப்புறங்களில் மக்கள் குடி பெயருவது போன்ற தோற்றம் உருவாகிறது" என்றார். பேராசிரியர் விஜயபாஸ்கர் கூறுகையில், "ஒரு வீட்டில் அதிகம் சம்பாதிக்கும் நபரின் வருவாய் மட்டுமே இதில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்தபடியாக மேலும் சிலரும் கூட வீட்டில் சம்பாதிக்கலாம். அது கணக்கில் இல்லை. இருப்பினும், இந்த வருமானம், விலைவாசி உயர்வோடு ஒப்பிட்டால் மிக குறைவாகும்" என்றார்.