இறுகுகிறது கிடுக்குப்பிடி விசாரணை... ராம்மோகன் ராவ் மகன் விவேக்கிற்கு சம்மன்
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் மகன் விவேக் நேரில் ஆஜராக வருமானவரித் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை: தமிழகத்தின் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ராம்மோகன் ராவின் மகன் விவேக் இன்று மாலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருமானவரித் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கோடிக் கணக்கில் கருப்புப் பணத்தையும், தங்கக் கட்டிகளையும் பதுக்கி வைத்திருந்த சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அடிப்படையில், தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் வீடு, அலுவலகம், அவரது மகன் விவேக் வீடு அலுவலகம் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என மொத்தம் 13 இடங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து, ராம்மோகன் ராவ் மகன் விவேக்கிற்கு வருமானவரித் துறை சம்மன் அளித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விவேக் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. விவேக் நேரில் ஆஜராகும் போது சோதனையின் சிக்கிய ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த வருமானவரித் துறை முடிவு செய்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற சோதனையில் 16 கோடி ரூபாய்க்கு விவேக் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வருமானவரி சோதனை நடைபெற்ற விவேக்கின் வீட்டில் பணம் மற்றும் நகை எதுவும் கைப்பற்றப்பட வில்லை. சேமியர்ஸ் சாலையில் உள்ள விவேக்கின் அலுவலகத்திலும் செல்போன்கள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து இன்று மாலை நேரில் ஆஜராகும் விவேக்கிடம் விசாரணை நடத்தப்படும். அப்போது, அதிகாரத்தோடு தொடர்புடைய மேலும பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.