வருமான வரித்துறை சோதனை: செய்யாதுரை வீட்டில் என்ன நடந்தது?.. ஐடி விளக்கம்!
அரசு கான்டிராக்டர் செய்யாதுரை வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து என்னென்ன கைப்பற்றப்பட்டது என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை: அரசு கான்டிராக்டர் செய்யாதுரை வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து என்னென்ன கைப்பற்றப்பட்டது என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை. 60 வயதான இவர் அரசின் முக்கிய ஒப்பந்ததாரர் ஆவார். இவருக்கு கருப்பசாமி, ஈஸ்வரன், நாகராஜ், பாலசுப்பிரமணியன் ஆகிய 4 மகன்கள் உள்ளனர்.
செய்யாத்துரை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில் நடைபெறும் பல்வேறு சாலைப்பணிகள், கட்டட கட்டுமான பணிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார்.
ரூ.600 கோடி ஒப்பந்தம்
தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கப்பலூர் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிக்கான ஒப்பந்தத்தை சேகர்ரெட்டி என்பவர் எடுத்து இருந்தாலும் அந்தவேலையை செய்யாத்துரையே செய்து வருகிறார். இதே போல் விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க சுமார் ரூ.600 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.
கல்குவாரி, ஸ்டார் ஹோட்டல்
அருப்புக்கோட்டை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் முக்கிய சாலை அமைக்கும் பணிகளும், கட்டுமான பணிகளும் நடப்பதால் அங்கும் செய்யாதுரைக்கு அலுவலகங்களும் உள்ளன. இவருக்கு கல்குறிச்சியில் நூற்பாலையும், கல்லூரணி பகுதியில் ஒரு கல்குவாரியும் உள்ளன. மேலும் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் எஸ்.பி.கே. என்ற 5 நட்சத்திர ஹோட்டலும் உள்ளது.
கார்களில் பதுக்கி பார்க்கிங்
இந்நிலையில் செய்யாதுரை பலக்கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. மேலும் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணத்தை செய்யாதுரையும் அவரது மகனும் கார்களில் பதுக்கி பார்க்கிங் செய்ததாகவும் தகவல் வெளியானது.
விடிய விடிய சோதனை
இதையடுத்து ஆபரேஷன் பார்க்கிங் என்ற பெயரில் நேற்று அதிகாலை சோதனையை தொடங்கியது வருமான வரித்துறை. செய்யாதுரைக்கு சொந்தமான 30 இடங்களில் விடிய விடிய நடைபெற்ற சோதனை இன்றும் நீடித்து வருகிறது.
என்னென்ன கைப்பற்றப்பட்டுள்ளது?
இந்நிலையில் இதுவரை செய்யாதுரை வீடு மற்றும் அலவலகங்களில் என்னென்ன கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
100 கிலோ தங்கம்
இந்த சோதனையில் இதுவரை ரூ.163 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 100 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊழியர்கள் வீடுகளில்
செய்யாதுரையின் மகன் நாகராஜன் வீட்டில் இருந்து 24 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. நாகராஜனின் ஊழியர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. ஊழியர்கள் வீடுகளிலும் பணம் பதுக்கியிருந்தது தெரியவந்துள்ளது.
பல இடங்களில் பதுக்கல்
இதில் வரி ஏய்ப்பு செய்தது குறித்து நாகராஜன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் நகைகள் பதுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
கார்களில் பதுக்கல்
கணக்கில் வராத பணத்தை நகையகாக மாற்றி கொடுத்த நகைக்கடை உரிமையாளரிடமும் விசாரணை நடத்துவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் செய்யாதுரை மற்றும் அவரது மகன் சொகுசு கார்களில் பெரும்பாலான பணத்தை பதுக்கியதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல்
வரி ஏய்ப்பு,பணம் பதுக்கல், வருமானத்தை தவறாக கணக்கு காட்டியதாக செய்யாதுரையும் அவரது மகனும் ஒத்துக்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பல முக்கிய ஆவணங்கள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகள், பென் டிரைவ்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.