அடுத்த ஆப்பு.. கடந்த 10 வருடங்களில் வாங்கப்பட்ட வீடு, நிலம் ஆவணங்களை சேகரிக்கிறது வருமான வரித்துறை!
கடந்த 10 வருட காலத்தில் நிலம், வீடு வாங்கியோரது விவரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளது வருமான வரித்துறை.
சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் மனை விற்பனை தொடர்பான விவரங்களை வருமான வரித்துறை சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து திடீரென நிறுத்தியது மத்திய அரசு. எனவே உடனடியாக தங்களிடமிருந்த ரூ.500 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கொண்டு இரவோடு இரவாக நகைக் கடைகளை முற்றுகையிட்டு ஆபரணங்களை வாங்கி குவித்தனர் பெரும் பணக்காரர்கள்.
இதையடுத்து, தங்க நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டுகளை நடத்தியது. சிசிடிவி காட்சிகளை கையகப்படுத்தி வைத்துள்ளது. இதே பாணியில், பத்திரப் பதிவுத் துறையிடம் இருந்து விவரங்களை சேகரித்து வருகிறது வருமான வரித்துறை.
கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக, அவற்றை வைத்து ஆபரணங்கள் மட்டுமின்றி, வீடு, நிலம் வாங்கியவர்களை கண்டுபிடிக்க வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
கடந்த 10 வருடங்களாக யார், யார் வீடு, நிலம், வீட்டுமனை வாங்கினார்களோ அந்த ஆவணங்களை சேகரித்து வருகிறது வருமான வரித்துறை. அவர்களில் சந்தேகத்திற்கிடமானவர்களிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பினாமி சொத்துக்கள் அம்பலமாகும் என தெரிகிறது. ஏற்கனவே மோடியும், தனது அடுத்த குறி பினாமி சொத்துக்கள்தான் என கூறியிருந்த நிலையில், வருமான வரித்துறை நடவடிக்கை அதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. இதனால் நிலம், வீடு வாங்கியோர் ஆடிப்போயுள்ளனர்.