ஐடி ரெய்டுக்குள்ளான "சித்தி" அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்... "நாட்டாமை"யிடம் விசாரணை
நடிகை ராதிகாவின் ராடன் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர் சரத்குமாரிடமும் மீண்டும் விசாரணை நடந்தது.
சென்னை: நடிகை ராதிகாவின் ராடன் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது முக்கிய ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோரது வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
ரூ.89 லட்சம் பறிமுதல்
அப்போது ரூ.89 லட்சம் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியதோடு அவர்களிடம் முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்த சோதனையின்போது தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்ததில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
சம்மன் அனுப்பியது
இதைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த மேற்கண்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி விஜயபாஸ்கரும், சரத்குமாரும், ராஜேந்திரனும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். கீதாலட்சுமி ஆஜராகாமல் இருக்க உயர் நீதிமன்றத்தை நாடினார்.
துருவி துருவி கேள்விகள்
ஆஜரானவர்களிடம் சுமார் 5 மணிநேரங்களாக விசாரணை நடத்தினர். அப்போது ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா செய்ததை விஜயபாஸ்கர் ஒப்புக் கொண்டார். அவரிடம் துறை ரீதியிலான விசாரணையும் நடைபெற்றது. மேலும் சரத்குமாருக்கு ரூ. 7 கோடி பணப்பட்டுவாடா ஆனது குறித்தும் விசாரணை நடைபெற்றது.
ராடனிலும் சோதனை
இந்த நிலையில், நடிகை ராதிகாவுக்கு சொந்தமான சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ராடன் மீடியா ஒர்க்ஸ் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது ராதிகா அலுவலகத்தில் இல்லை, படப்பிடிப்புக்காக வெளியே சென்றிருந்தார்.
கொட்டிவாக்கத்திலும் சோதனை
ராடனில் சோதனை நடைபெற்ற அதே வேளையில் மாலையில் கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று சரத்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். ராடன் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் சில சரத்குமார் பெயரிலும் இருப்பதால் அவரிடம் இந்த விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்ததும், சரத்குமாரையும் அழைத்துக்கொண்டு ராடன் நிறுவன அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து சில விளக்கங்களை அவரிடம் கேட்டனர்.