கிறிஸ்டி நிறுவனம் ரூ. 1350 கோடி வரி ஏய்ப்பு.. வருமான வரித்துறை ஆய்வில் அம்பலமான அதிர்ச்சி தகவல்
கிறிஸ்டி நிறுவனம் 1350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது வருமான வரித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை: கிறிஸ்டி நிறுவனம் 1350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது வருமான வரித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
குமாரசாமி என்பவரால் நடத்தப்படும் கிறிஸ்டி நிறுவனம் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு அதிக அளவு முட்டைகளையும் பருப்பு மற்றும் சத்துமாவை விநியோகித்து வருகிறது.
இந்நிலையில், போலி நிறுவனம் நடத்தி வரி ஏய்ப்பு செய்ததாக சென்னை திருவான்மியூரில் உள்ள குமாரசாமியின் வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
500க்கும் மேற்பட்ட அதிகாரிகள்
சென்னை, பெங்களூரு, கோவை, சேலம், திருச்செங்கோட்டில் உள்ள 75 இடங்களில் 500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக சோதனை நடத்தினர். தமிழகத்திலும் நாமக்கல், ராசிபுரம், உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
அதிகாரிகள் விசாரணை
இதைத்தொடர்ந்து மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்த கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமியை வருமான வரித்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் சென்னை அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
ரூ.1350 கோடி வரிஏய்ப்பு
இந்நிலையில் கிறிஸ்டி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் கடந்த 5 நாட்கள் நடைபெற்ற சோதனையில் கிறிஸ்டி நிறுவனம் 1350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.
லாரி நிறைய ஆவணங்கள்
5 வது நாள் சோதனையில் வரி ஏய்ப்பு செய்ததற்கான மற்றும் சொத்துக்கள் குறித்த ஆவணங்கள் லாரி நிறைய கைப்பற்றப்பட்டன. மேலும் கிறிஸ்டி நிறுவனத்துக்கு சொந்தமான 100 போலி நிறுவனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
100 பென் டிரைவ்கள்
மேலும் சொத்துக்கள் குறித்த விவரங்கள் அடங்கிய 100க்கும் மேற்பட்ட பென் டிரைவ்கள் மற்றும் ஹார்டு டிஸ்க்களும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கிறிஸ்டி நிறுவனம் போலி நிறுவனங்களை கணக்கில் காட்டி வரி ஏய்ப்பு செய்ததும் அம்பலமாகியுள்ளது.
அமலாக்கத்துறை விசாரனை
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளிக்கவும் வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. மேலும் வெளி நாடுகளில் சொத்துக்கள் பதுக்கப்பட்டிருக்கிறதா என்ற தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வரி ஏய்ப்பு - அதிர்ச்சி
தமிழக அரசுப்பள்ளிகளுக்கு சத்துணவு முட்டை விநியோகம் செய்யும் கிறிஸ்டி நிறுவனம் 1350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.