ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை! அருப்புக்கோட்டையில் பரபரப்பு
சென்னை: ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எஸ்பிகே கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் தலைவர் செய்யாதுரை. இவருக்கு சொந்தமான மதுரையில் உள்ள விடுதி, வீடு, சென்னையிலுள்ள அலுவலகம், அருப்புக்கோட்டை வீடுகளில் 40க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் கடந்த ஜூலை 16ம் தேதி துவங்கி தொடர்ந்து 4 நாட்கள் ரெய்டுகள் நடத்தினர்.
அப்போது, ரூ.183 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. 105 கிலோவுக்கும் மேலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ரெய்டு முடிவில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை, அருப்புக்கோட்டையிலுள்ள செய்யாதுரைக்கு சொந்தமான காம்ப்ளக்ஸ் அறையில் வைத்து பூட்டி சீல் வைத்து சென்றனர் அதிகாரிகள். இப்போது அந்த அறையை திறந்து ஆவணங்களை ஆய்வு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஏற்கனவே செய்யாதுரை அவரது மகன்களிடம் வருமான வரித்துறை நேரடியாக விசாரணை நடத்தினர். பல்வேறு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. தொடர் விசாரணையின் அடுத்தகட்டமாக வருமான வரித்துறை ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சோதனை மேலும் சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது.