போயஸ் கார்டன் ரெய்டில் 70 போலி நிறுவனங்கள் கண்டுபிடிப்பு... வருமான வரித்துறை பரபர தகவல்
போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட ரெய்டில் 70 போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
Recommended Video
சென்னை: போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட ரெய்டின்போது 70 போலி நிறுவனங்களுக்கான ஆவணங்கள் இருப்பது தெரியவந்ததாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
சசிகலாவின் உறவினர்களின் வீடுகளில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு ஆவணங்கள், நகைகள், ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, சசிகலாவின் உறவினர்களுக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் விசாரணை நடைபெற்றது. இதற்கு அதிமுக தொண்டர்கள் கண்டனம் தெரிவித்தனர். அங்கிருந்து பென் டிரைவ்களும், லேப்டாப்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
சசிகலா உறவினர் வீடுகள்
இதைத் தொடர்ந்து ரெய்டு குறித்து பலதரப்பட்ட தகவல்கள் வரும் நிலையில் இன்று வருமான வரித்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். அதில் வரி ஏய்ப்பு தொடர்பாக தொடர்ந்து நுண்ணறிவு பிரிவினர் கண்காணித்து வந்ததை அடுத்து சசிகலாவின் உறவினர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது.
15 கணக்குகள் முடக்கம்
போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட ரெய்டின் போது 70-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது குறித்து விசாரணை நடைபெறுகிறது. மேலும் 15 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.
சசிகலாவுக்கு 4 அறைகள்
போயஸ் கார்டனில் சசிகலாவின் 4 அறைகள், பூங்குன்றனின் ஒரு அறை என மொத்தம் 5 அறைகளில் சோதனை நடைபெற்றது. அதற்கான சாவியை இளவரசியின் இளைய மகள் ஷகிலாவின் கணவர் ராஜராஜனிடம் இருந்து பெறப்பட்டது. உறுதியான தகவல், கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.
ஜெயலலிதா அறையில் ஆய்வில்லை
ரெய்டின் போது பறிமுதல் செய்யப்பட்ட பென் டிரைவ் மற்றும் லேப்டாப்களில் ஆய்வு நடைபெறுகிறது. ஜெயலலிதாவின் அறையில் ஆய்வு செய்யவில்லை. தமிழக போலீஸாரின் உதவியே போதுமானதாக இருந்ததால் துணை ராணுவத்தை நாடவில்லை.
சசிகலாவிடம் விசாரணை நடத்தப்படும்
வெளிநாட்டு முதலீடு குறித்த ஆவணங்கள் கிடைத்தால் அதுகுறித்தும் விசாரணை நடைபெறும். தேவைப்பட்டால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சிறையில் உள்ள சசிகலாவிடமும், இளவரசியிடமும் விசாரணை நடத்தப்படும் என்று வருவாய் துறை தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.