அயல்நாடுகளில் ஆவணங்கள் பதுக்கல்... இளவரசி வாரிசுகளிடம் கிடுக்கிப்பிடி போடும் வருமானவரித்துறை
சொத்துக்களின் ஆவணங்களை சசிகலா குடும்பத்தினர் வெளிநாடுகளில் பதுக்கியதற்கான தகவல்கள் வருமானவரித்துறையினரிடம் சிக்கியுள்ளன.
Recommended Video
சென்னை: சொத்து ஆவணங்களை வெளிநாடுகளில் பதுக்கியுள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் இளவரசி வாரிசுகளிடம் விசாரணையை தீவிரப்படுத்த வருமானவரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
சசிகலா, திவாகரன், இளவரசி குடும்பத்தினருக்கு தொடர்புடைய வீடுகள், அலுவலகங்கள், பினாமிகளின் வீடுகளில் கடந்த 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழகம், கர்நாடகம், புதுச்சேரியில் மொத்தம் 187 இடங்களில் 1,800 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கொடநாடு எஸ்டேட்டில் 6 நாட்கள் நடைபெற்ற சோதனையில் பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
விவேக், ஷகிலா, கிருஷ்ணபிரியா
ரெய்டில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் இளவரசியின் வாரிசுகளுக்கு வருமானவரித்துறை சம்மன் கொடுத்து விசாரித்து வருகிறது. கடந்த வாரங்களில் ஜெயா டிவி சிஇஓ விவேக், அவரது சகோதரிகள் கிருஷ்ணபிரியா, ஷகிலா மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
விடாது விரட்டும் விசாரணை
கிருஷ்ணபிரியாவின் கணவர் கார்த்திகேயன், ஷகிலாவின் கணவர் ராஜராஜன் ஆகியோரும் சசிகலா தொடர்புடைய பல நிறுவனங்களில் நிர்வாகிகளாக உள்ளனர். இதனால், கடந்த 17ம் இருவரையும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்கு வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஷகிலாவிடம் விசாரணை நடந்தது.
சிக்கிய பினாமிகள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஜெயா டிவி மேலாளர் நடராஜன், அதிமுக அம்மா அணி கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, டாக்டர் சிவக்குமார், ஜாஸ் சினிமாஸ் நிர்வாகிகள் உட்பட பலரும் வருமான வரித்துறையினரின் பிடியில் இருந்து தப்பவில்லை.
வேதா இல்லத்தில் அதிரடி
ஷகிலா, பூங்குன்றன் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடந்த 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வீடான வேதா இல்லத்தில் நடந்த ரெய்டில் பென்-டிரைவ், கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்க் மற்றும் பணப் பரிமாற்றங்கள் குறித்த எலக்ட்ரானிக் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
நிபுணர்கள் ஆய்வு
கைப்பற்றப்பட்ட பென்-டிரைவ், ஹார்டுடிஸ்குகளில் பதிவான தகவல்களை நிபுணர்கள் குழு மூலம் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவற்றில் பதிவு செய்யப்பட்டு அழிக்கப்பட்ட தகவல்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் பணப் பரிமாற்றம், பினாமி சொத்துகள் தொடர்பான பல தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
ரசீதுகள் சிக்கின
போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனையில் இவர்களுக்கு எதிராக பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. சொத்துக்களின் ஆவணங்களை பெட்டிகளில் அடைத்து அவற்றை விமானங்கள் மூலம் சிங்கப்பூர், துபாய்க்கு அனுப்பி வைத்ததற்கான ரசீதுகள் கிடைத்துள்ளனவாம்.
தனி குழு அமைப்பு
இதனால் இளவரசி குடும்பத்தினரிடம் விசாரணையை தீவிரப்படுத்த வருமான வரித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.இளவரசி குடும்பத்தினரிடம் மட்டும் விசாரிக்க சென்னை மண்டல அதிகாரி தலைமையில் தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
சசிகலா, இளவரசியிடம் விசாரணை
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பல நிறுவனங்களின் நிர்வாகிகளாக உள்ளனர். வரி ஏய்ப்பு குறித்து இவர்களிடமும் விசாரணை நடத்த டெல்லி அதிகாரிகளின் அனுமதிக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் காத்துள்ளனர். விரைவில் இவர்களிடமும் விசாரணை நடைபெறும்.
வெளிநாடு செல்லும் அதிகாரிகள்
சசிகலா,இளவரசி குடும்பத்தினருக்கு வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் பற்றிய விபரங்களைப் பற்றி விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். விமானம் மூலம் சென்ற ஆவணங்கள் பற்றி விசாரிக்கவும், வருமானவரித்துறை அதிகாரிகள் வெளிநாடு செல்லவும் முடிவு செய்துள்ளதால் சசிகலா குடும்பத்தினர் கலக்கமடைந்துள்ளனர்.