தலைமைச் செயலகத்தில் ரெய்டு.. ராம்மோகன் ராவை டிஸ்மிஸ் செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்
தலைமைச் செயலாளர் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை செய்வது தமிழர்களுக்கு அவமானம் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
சென்னை: இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒன்றாக தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்துக்குள் நுழைந்து தலைமை செயலர் அறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளது என்பது தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அவமானம் என்றும் உடனடியாக ராம்மோகன் ராவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கருப்புப் பணம், ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாக ரெட்டி சகோதரர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
அத்துடன் இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒன்றாக தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்துக்குள் நுழைந்து தலைமை செயலர் அறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளது. இது தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் பெரும் அவமானம்; தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய பேரவமானத்தை ஏற்படுத்தியுள்ள ராமமோகன் ராவை உடனடியாக தலைமை செயலர் பதவியில் இருந்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ராமமோகன் ராவ் வீடுகளில் இருந்து கைப்பற்றப்படும் பணம் மற்றும் நகைகளின் அடிப்படையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும் அவர் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இந்த நடவடிக்கையை தமிழக அரசு சுதந்திரமாக மேற்கொள்ள ராமமோகன் ராவ் டிஸ்மிஸ் செய்யப்படுவதுதான் சரியானதாக இருக்கும். ராமமோகன் ராவ் மட்டுமின்றி இன்னமும் ஊழல் செய்த அதிகாரிகள் பலரும் இருக்கின்றனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ராமமோகன் ராவ் வீடு, அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் அனைத்தும் பற்றி வருமான வரித்துறை தெளிவான விளக்கத்தை தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அத்துடன் இத்தகைய அதிகாரிகளுக்கு உடந்தையாக இருப்பவர் எந்த உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
ஊழல் என்பது நாட்டை ஆக்கிரமித்துள்ள மிகப் பெரும் புற்றுநோய். இதை வேரோடு வெட்டி சாய்க்கவேண்டும்; இதற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும்; போராடும். ஆகையால் எத்தகைய உயர் பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமான வரித்துறை அதிகாரிகளும் எந்த ஒரு அரசியல் அழுத்தங்களுக்கும் துணைபோகாமல் நேர்மையாக செயல்பட வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது என்று வேல்முருகன் கூறியுள்ளார்.