பாலா, தனுஷ் மற்றும் குஷ்பு வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
சென்னை: இயக்குநர் பாலா, நடிகர் தனுஷ் மற்றும் நடிகை குஷ்பூ ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி இருக்கின்றனர்.
பெரிய படங்களை வெளியிடும்போது சம்பந்தப்பட்ட படக்குழுவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வரிசையில் தாரை தப்பட்டை இயக்குநர் பாலா, அரண்மனை 2 வைத் தயாரித்திருக்கும் குஷ்பு மற்றும் தனுஷ் ஆகியோரது வீடுகளில் சோதனை நடந்துள்ளது.
பாலா
பொங்கலுக்கு இயக்குநர் பாலாவின் தாரை தப்பட்டை படம் வெளியாகி இருக்கிறது. இதனையடுத்து வருமான வரித்துறையினர் இயக்குநர் பாலாவின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் சில முக்கியமான ஆவணங்களை பாலாவின் வீட்டிலிருந்து அவர்கள் கைப்பற்றி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தாரை தப்பட்டை வெளியான உற்சாகம் பாலாவிடம் துளிக்கூட இல்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
குஷ்பு
குஷ்புவின் அவ்னி சினி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் அரண்மனை 2 தற்போது பொங்கல் ரேஸில் பின்வாங்கி வருகின்ற 29 ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருக்கின்றனர். இந்த சோதனையில் சில முக்கியமான ஆவணங்களை அவர்கள் கைப்பற்றி சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தனுஷ்
ஆனால் தனுஷ் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகாத இந்த நேரத்தில் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திச் சென்றிருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சோதனையில் தனுஷ் வீட்டில் இருந்தும் சில முக்கியமான ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி இருப்பதாக கூறுகின்றனர்.
தகவல் இல்லை
இந்த மூன்று பேரின் வீடுகளிலும் நடைபெற்ற சோதனையில் ஆவணங்களைத் தவிர வேறு ஏதேனும் பணம், பொருட்கள் போன்றவற்றை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றனரா? என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
புலி
முன்னர் இதே போல புலி பட வெளியீட்டின் போது நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி படத்தின் வெளியீட்டை தள்ளிப்போக செய்தனர். மேலும் சமந்தா, நயன்தாரா ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.