செட்டிநாடு குழுமத்தின் 39 அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்ட்!
சென்னை: செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 39 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று ரெய்ட் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 35 இடங்களிலும், ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களிலும் ஒரே நேரத்தில் இந்த ரெய்ட் நடந்து வருகிறது.
செட்டிநாடு குழும சொத்துக்கள் தொடர்பாக தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமிக்கும், அவரது முன்னாள் வளர்ப்பு மகன் அய்யப்பனுக்கும் இடையே மோதல் நடந்து வரும் நிலையில், இப்போது இந்த சோதனைகள் நடந்து வருகின்றன.
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்பதால் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமாக செட்டிநாடு சிமெண்ட்ஸ், செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவமனைகள், செட்டிநாடு பவர் கார்பரேசன், செட்டிநாடு குவார்ட்ஸ் நிறுவனம், கண்ணாடிகள் தயாரிக்க உதவும் சிலிகாவை தயாரிக்கும் செட்டிநாடு எம்பி-எப் சிலிகா நிறுவனம், செட்டிநாடு லாரி நிறுவனம், கப்பல் நிறுவனம், நிலக்கரி கிட்டங்கி நிறுவனம், காபி- பணப் பயிர், பழத் தோட்டங்கள், கட்டுமான நிறுவனம், ஜவுளிி நிறுவனம், ஸ்டீல் பேப்ரிகேசன், விண்ட் பவர், என்ஜினியரிங், பல் மருத்துவக் கல்லூரிகள், செளத் இந்தியா நிறுவனம், செட்டிநாடு பல்கலைக்கழகம் ஆகியவை உள்ளன.
இந்த நிறுவனத்தின் தலைமையகம் சென்னை அண்ணா சாலை ராணி சீதை ஹாலில் உள்ளது.