அண்ணாவின் அரசியல் நாகரீகத்தை பின்பற்ற வேண்டும்.. விஜயகாந்த்துக்கு வைகோ மறைமுக கொட்டு
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் அரசியல் நேர்மை, நாகரீகத்தை தற்போதைய அரசியல்வாதிகள் பின்பற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வநாதன் எழுதிய அண்ணா அருமை அண்ணா நூல் வெளியீட்டு விழா சென்னை ராணி சீதை அரங்கில் நேற்று நடைபெற்றது. முன்னாள் எம்.பி. இரா.செழியன் தலைமை தாங்கிய இந்த விழாவில், முதல் பிரதியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட, தமிழக முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து விழாவில் வைகோ பேசியதாவது:-
தமிழ் குலத்திற்கு உலக அரங்கில் அடையாளம் பெற்றுத்தந்தவர் அண்ணா. அரசியலை தாண்டி தொலைநோக்கோடு அரசியல் நாகரிகம், அரசியல் தீண்டாமை போன்றவற்றுக்கு உதாரணமாகவும் திகழ்ந்தார். அண்ணா பின்பற்றிய அரசியல் நேர்மை, நாகரிகம், எளிமையான வாழ்க்கை தற்போதைய அரசியல்வாதிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும்.
அவருடைய சிந்தனைகளும், செயல்பாடுகளும் பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும். அவர் குறித்து ஜி.விஸ்வநாதன் எழுதிய புத்தகம் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது' என இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அண்ணாவின் மருமகள் விஜயா உள்ளிட்ட உறவினர்கள் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன், முன்னாள் எம்.பி.க்கள் தா.பாண்டியன், எம்.கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் பேசினர்.
பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், தொழிலதிபர் வி.ஜி.பி.சந்தோஷம் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னதாக மூத்த பத்திரிகையாளர் ஜாசன் வரவேற்றார். கண்ணதாசன் பதிப்பக உரிமையாளர் காந்தி கண்ணதாசன் நன்றி கூறினார்
பத்திரிகையாளர்களை நோக்கி தூ எனத் துப்பி, தரக்குறைவாகப் பேசியது, முதல்வரின் புகைப்படத்தை கிழித்தெறியச் சொன்னது என கடந்த சில தினங்களில் மட்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியுள்ளார். இந்நிலையில், வைகோ இவ்வாறு கூறியிருப்பது, மறைமுகமாக விஜயகாந்தின் செயலை விமர்சித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
காரணம் வைகோவின் மக்கள் நலக் கூட்டியக்கம் வரும் சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறது. எனவே விஜயகாந்தின் நடவடிக்கையை நேரடியாக விமர்சிக்காமல், இவ்வாறு மறைமுகமாக அவர் விமர்சித்திருப்பதாக கருதப்படுகிறது.