ஜி.எஸ்.டி.,யால் உயர்ந்த கூரியர் சேவை விலை : மீண்டும் தபால் நிலையங்களை நாடும் மக்கள்
ஜி.எஸ்.டி வரி விதிப்பால் கூரியர் சேவைக்கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.
நெல்லை : ஜி.எஸ்.டி வரி விதிப்பால் கூரியர் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மீண்டும் தபால் நிலையங்களையே நாடத் தொடங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு பிறகு பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. கூரியர் தபாலுக்கும் ஜி.எஸ்.டி 18 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் முன்பு ரூ.25 மட்டுமே செலுத்தி வந்த வாடிக்கையாளர்கள் இப்போது ரூ.30 முதல் ரூ.80 வரை செலுத்த வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
கூரியர் சேவையில் குறைந்தபட்ச கட்டணமே ரூ.35 என நிர்ணயிக்கப்பட்டு விட்டதாகப் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், தபால் துறையில் விரைவு தபால் சேவையில் எடைக்கு ஏற்ப மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் பலரும் தற்போது கூரியரை கைவிட்டு தபால் நிலையங்களுக்கே படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
தபால் துறையில் 50 கிராம் எடை கொண்ட தபாலுக்கு ரூ.15 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இது உள்ளூர் மட்டுமே பொருந்தும். வெளி மாநிலம் என்றால் டெல்லி வரை அனுப்ப ரூ.35 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
50 கிராம் முதல் 200 கிராம் வரை உள்ளூர் எனில் ரூ.25 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது 100 கி.மீ.,க்குள் என்றால் ரூ.35ம், அதற்கு மேல் என்றால் ரூ.40ம் வசூலிக்கப்படுவதால் பொது மக்கள் கூரியரை கைவிட்டு விரைவு தபாலுக்கு மாற தொடங்கியுள்ளனர்.