ஏழைகளை பாதிக்கும் மின்கட்டண உயர்வை உடனே வாபஸ் பெறுக: ராமதாஸ்
விழுப்புரம்: ஏழை எளிய மக்களை மிகவும் பாதிக்கும் மின் கட்டண உயர்வை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் ரூ.5 ஆயிரத்து 447 கோடி அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் வெறும் ரூ.825 கோடிக்கும் மட்டுமே மானியம் அளிக்கப்படுகிறது. ஏழை எளிய மக்களை மிகவும் பாதிக்கும் இந்த மின் கட்டண உயர்வை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். ரூ.5 லட்சம் கோடிக்கு தாது மணல், ஆற்று மணல், கிரானைட் மோசடி ஆகியவை நடந்துள்ளது. 2ஜி ஊழலை விட பெரிதான இது பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
கிரானைட் மோசடி பற்றி சகாயம் குழு தற்போது விசாரித்து வருகிறது. இந்நிலையில் சகாயத்திற்கு உதவியாக உள்ள அதிகாரிகளுக்கு ஆளுங்கட்சியினர் நெருக்கடி கொடுத்து வருவது தெரிய வந்துள்ளது. சகாயம் குழு சுதந்திரமாக செயல்பட விட வேண்டும்.
நம் நாட்டில் தமிழ் உள்பட 22 தேசிய மொழிகள் உள்ளன. அத்தனை மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்.
காங்கிரஸுக்கும், வாசன் கட்சிக்கும் இடையே ஒரேயொரு வித்தியாசம் தான். மூப்பனார் பெயரை கூறி வாக்கு கேட்போம் என்கிறார் வாசன். மூப்பனார் பெயரை பயன்படுத்த மாட்டோம் என்கிறது காங்கிரஸ். காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று வாசனும், காங்கிரஸாரும் தெரிவித்துள்ளனர். அப்படி என்றால் அவர்கள் அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்க கூடாது.
சட்டசபையில் அமைச்சர் வைத்திலிங்கம் மு.க. ஸ்டாலினை தாக்க பாய்ந்தார் என்று பத்திரிக்கைகளில் செய்தி பார்த்தேன். சட்டசபை ஒன்றும் குத்துச்சண்டை நடக்கும் களம் இல்லை. சட்டசபையை ஜனநாயக முறையில் நடத்த வேண்டும். 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாமக தலைமையில் அமையும் கூட்டணி தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் இலங்கை அரசு ஆகியவை நாடகமாடுவது போல் தெரிகிறது. ஒருபுறம் கைது செய்கிறார்கள். மறுபுறம் விடுதலை செய்கிறார்கள். இலங்கையிடம் மத்திய அரசு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்றார்.