சுற்றுலா பயணிகளே நோட் பண்ணுங்க.. ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பால் பரிசல் இயக்கத் தடை
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்: ஒகேனக்கலில் காவிரியில் நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியிலிருந்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்துவருவதால், கர்நாடக அரசு கபினி கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது. இதனால், மேட்டூர் அணையில் நீர் மட்டம் 102 அடியிலிருந்து 109 அடியை எட்டியுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை கர்நாடக அரசு கே.ஆர்.எஸ். அணையிலிருந்து திறந்துவிடும் தண்ணீரின் அளவை 80 ஆயிரம் கன அடியிலிருந்து 40 ஆயிரம் கன அடியாக குறைத்திருந்தது.
இந்நிலையில், ஒகேனக்கல்லில் காவிரியில் இன்று வெள்ளிக்கிழமை நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் நேற்று 50 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து இருந்தது. இன்று 70 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் 12 வது நாளாக பரிசல் இயக்கவும் அருவிகளில் குளிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.