சென்னை ஏர்போர்ட்டில் அதிகரிக்கும் தங்கம் கடத்தல்: சுங்க இலாகா உளவு பிரிவு ஏ.சி. இடமாற்றம்
சென்னை: விமான நிலையத்தில் தங்கம் கடத்தும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து சுங்க இலாகா உளவு பிரிவு உதவி கமிஷனர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் தங்கம் கடத்தும் சம்பவம் கடந்த 2 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் ரூ.13 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ரூ.42 கோடி மதிப்புள்ள தக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தங்கம் கடத்திய தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தவர்கள் சிக்கினர். துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுகிறது. நாட்டில் உள்ள விமான நிலையங்களிலேயே சென்னை விமான நிலையத்தில் தான் தங்கம் அதிக அளவில் கடத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் அகர்வால் இடமாற்றம் செய்யப்பட்டு சந்திரசேகர் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் விமான நிலைய சுங்க இலாகா உளவு பிரிவு உதவி கமிஷனர் மத்திய கலால் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் சுங்க இலாக்காவில் உள்ள பலரும் இடமாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
தங்கம் கடத்தல் சம்பவங்களை தடுக்கவே அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.