தமிழக கடைகளில் நிரம்பி வழியும் வட கிழக்கு மாநில "பையாக்கள்".. கம்மி சம்பளம், நிறைய வேலை!
சென்னை: தமிழகம்... ஒரு காலத்தில் கழனியில் இருந்து கடைகள் வரையில் வேலையில் இருப்பவர்களைப் பார்த்தால் சொந்த ஊர்காரர்களாகத்தான் இருப்பார்கள்.
ஹோட்டலாக இருக்கட்டும், கட்டிட வேலையாக இருக்கட்டும் மேஸ்திரிகளாகவும், சர்வர்களாகவும், சித்தாட்களாகவும், கொத்தனார்களாகவும், கல்லாப்பெட்டியிலும் முக்கிய இடம் பிடித்திருந்தவர்கள் சொந்த மொழி பேசும் மக்கள்தான்.
சுற்றம் புடை சூழ வியாபாரம்:
முக்கால்வாசிப் பேர் மாமன், மச்சான், தூரத்துச் சொந்தம், ஊர்க்காரன் என்றுதான் வேலையில் அமர்த்தியிருப்பார்கள். காரணம் உரிமையுடன் கடிந்து கொள்ளவும், உற்சாகமாக வேலை பார்த்து உயர்விற்கு வழி செய்யவும் அவர்கள் தயாராக இருந்ததுதான்.
இன்றும் அப்படித்தானா?
ஆனால், இன்றும் நிலைமை அப்படித்தான் இருக்கின்றதா? உண்மையாகச் சொல்லப் போனால் இல்லை. தற்போது தமிழகத்தில் இதுபோன்ற கடைகளிலும், வேலைகளிலும் நூற்றுக்கு 90 சதவிகிதம் இடம் பிடித்திருப்பவர்கள் மற்ற மொழிகள் பேசும் வட கிழக்கு மாநில மக்களே.
பெருநகரங்களில் இதே நிலை:
சென்னை மட்டுமல்லாது மதுரை, திருச்சி, சேலம் போன்ற பெரு நகரங்களிலும் தற்போது அதிக அளவில் வேற்று மொழி மக்கள்தான் பணியில் இருக்கின்றார்கள்.
உழைக்கத் தயங்கிறார்களா தமிழர்கள்?:
அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, "தமிழ்நாட்டு பணியாளர்கள் குறைந்த சம்பளத்திற்காக அதிக நேரம் உழைக்கத் தயங்குகின்றார்கள்" என்பதுதான்.
என்னதான் நடக்குது இங்கே:
உண்மையில் என்னதான் நடக்கின்றது? ஒரு பெயர் சொல்ல விரும்பாத தமிழக ஊழியர் ஒருவரிடம் கேட்டோம்.
"இப்போதெல்லாம் முன்னாடி மாதிரி இல்லை. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர, உயர பொது இடங்களில் கூட்டமும் அதிகரிக்கத் துவங்கி விட்டது. ஐ.டி கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள் மட்டும்தான் 8 மணி நேரத்திற்கும் மேல் உழைத்து களைத்து போகின்றார்கள் என்ற பிம்பம் இங்குள்ளது.
உரிய சம்பளம் கிடைப்பதில்லை:
ஆனால், ஏசியில் உட்கார்ந்து வேலை பார்ப்பதற்கும், வேகாத வெயிலும், அடுப்பின் சூட்டிலும் வெந்து தணிந்து வேலை பார்க்கும் எங்கள் நிலைமைதான் மிகவும் கொடுமை. ஆனால், 12 மணி நேரத்திற்கும் மேலாக மாடாக உழைத்தாலும் எங்களுக்கான உரிய சம்பளம் கிடைப்பதில்லை.
மொழி தெரியாத சகோதரர்கள்:
சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றுவதால், நல்ல வேலைக்காரர்கள் உடனடியாக வேலையை விட்டு நின்றும் விடுகின்றனர். அதனால்தான், இப்போதெல்லாம் வட கிழக்கு மாநிலத்தினரை அதிகளவில் பணியமர்த்துகின்றனர். அவர்களுக்கு மொழியும் தெரியாது.
சம்பளத்திற்காக உழைப்பதில்லை:
வேலையும் மாங்கு, மாங்கென்று பார்க்கின்றார்கள். சம்பளத்தைப் பற்றிக் கவலையும் படுவதில்லை. இந்த சம்பளம் கூட அவர்களது ஊரில் இல்லை என்பதுதான் இந்த வேலையைப் பார்க்க அவர்கள் முன்வர முக்கியக் காரணம்" என்று கூறினார்.
வாட்டி வதைக்கும் வறுமை:
அதே போல கட்டிடத் தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் சென்னை மெட்ரோ ரயில் பணிகளில் இருந்து, கட்டிட ஒப்பந்தக் காரர்கள் வரையில் வட நாட்டவரைத்தான் பணியமர்த்தியுள்ளனர். அவர்களும் வறுமை நிலை காரணமாக அதிக சம்பளமெல்லாம் எதிர்ப்பார்ப்பதில்லை.
ஹோட்டல்களிலும் அவர்கள்தான்:
சென்னையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான பல கிளைகளைக் கொண்ட கடை ஒன்றில், முக்கால்வாசிக்கும் அதிகமானோர் வட நாட்டு ஊழியர்கள்தான். அதிலும் வட கிழக்கு இந்தியர்கள்தான்.
சோகம் இழையோடும் புன்னகை:
பரிமாறுவதிலாகட்டும், டேபிள் துடைப்பதிலாகட்டும் மொழி தெரியாவிட்டாலும் ஒரு புன்சிரிப்புடனேயே கடந்து போகின்றார்கள். ஆனால், அதில் குடும்பத்தை விட்டுவிட்டு வயிற்றுப் பிழப்பிற்காக பல நூறு மைல் தூரம் கடந்து வந்திருக்கும் சோகமும் இழையோடிக் கொண்டுதான் இருக்கின்றது.