வட்டமான தட்டு... தட்டு நிறைய லட்டு... ஆனா, வாங்கத்தான் ஆளிலில்லை... அப்செட் ஆன விஜயகாந்த்!
சென்னை: சென்னை தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். ஆனால், இந்த நிகழ்ச்சியில் ஐம்பதுக்கும் குறைவானவர்களே கலந்து கொண்டதால் விஜயகாந்த் அப்செட் ஆகிவிட்டாராம்.
சென்னை கோயம்பேட்டில் இயங்கி வருகிறது தேமுதிக தலைமை அலுவலகம். இங்கு ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அப்போது கட்சியின் கட்சியின் மாநில நிர்வாகிகள் துவங்கி, அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் அங்கு கூடுவர். இதனால் அந்த அலுவலகமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
இந்நிலையில், நேற்றும் வழக்கம் போல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப் பட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அவர் லட்டு வழங்கினார்.
எப்போதும் போல், தொண்டர்கள் கூட்டம் படையெடுத்து வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் தட்டு நிறைய லட்டு வாங்கி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விழாவில் மொத்தமாக 50 பேர் கூட கலந்து கொள்ளவில்லை. மகளிர் அணியினர், ஐந்து பேர் மட்டுமே பங்கேற்றனர்.
இதனால் தட்டு நிறைய லட்டு இருந்தும், அதை வாங்க ஆள் இல்லாத நிலை ஏற்பட்டது. இதைக் கண்டு விஜயகாந்த் வருத்தம் அடைந்ததாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபைத் தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் கை கோர்த்ததில் இருந்து அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டுள்ளது நினைவுக் கூரத்தக்கது.