72வது சுதந்திர தினம்.. சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு
நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை: சுதந்திர தின விழா நெருங்கி வருவதால் நாடு முழுவதும் பாதுகாப்பினை போலீசார் பலப்படுத்தி உள்ளனர். இதனையடுத்து சென்னை விமான நிலையத்திலும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
72-வது சுதந்திர தினவிழா வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப் பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்த உள்ளார்.
சீர்குலைக்க சதி
இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கோலாகலமாக நடைபெற உள்ள விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
போலீஸ் குவிப்பு
இதையடுத்து பாதுகாப்பு குறித்த ஏற்பாடுகளில் மத்திய அரசு கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. அதன்படி டெல்லி செங்கோட்டையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாநில தலைநகரங்கள், முக்கிய நகரங்களிலும், அரசு சார்பில் சுதந்திர தினம் நடைபெற உள்ள இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
7-அடுக்கு பாதுகாப்பு
சென்னை விமான நிலையத்தில் நேற்றிரவு முதல் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையமே தற்போது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வரும் 22-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்திகை நிகழ்ச்சி
இதனிடையே, சென்னை ராஜாஜி சாலையில் சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல நாளையும், நாளை மறுதினமும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி காரணமாக, அந்த பகுதியில் போக்குவரத்தில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது.