'விடாது கறுப்பு': கங்கணம் கட்டி களம் இறங்கிய முத்தரையர்கள்... கதிகலங்கும் அதிமுக வேட்பாளர்கள்
புதுக்கோட்டை: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட கறம்பக்குடி அதிமுக நிர்வாகி சொக்கலிங்கம் முத்தரையர் சங்க நிர்வாகிகளுடன் ஊர்வமலாக சென்று புதுக்கோட்டை தொகுதிக்கு சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். சொக்கலிங்கத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான முத்தரையர்கள் ஒன்று திரண்டு அதிமுகவினரை கதிகலங்க வைத்துள்ளது.
புதுக்கோட்டையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக கறம்பக்குடி அதிமுக ஒன்றிய சேர்மன் கெங்கையம்மாள் சொக்கலிங்கம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். முத்தரையர் இனம் பற்றி இழிவாக பேசியதாக அவர்கள் இந்த போராட்டங்களை நடத்தினர்.
ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மீதே அதிமுக தலைமை தலைமை நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்கியது. இதில் கொதிப்படைந்த முத்தரையர் மக்கள் மீண்டும் போராட்டங்களை நடத்தியதுடன், அதிமுகவை தோற்கடிப்போம் என்று தீர்மானங்கள் போட்டு அதற்கான வேலைகளை செய்து வந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகள் மட்டுமின்றி திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, என அனைத்து மாவட்டங்களிலும் அதிமுகவுக்கு எதிராக செயல்படுவது எனவும் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், விஜயபாஸ்கர் போன்ற அமைச்சர்களை தோற்கடிக்க குழு அமைத்து செயல்படுவது எனவும் தீர்மானத்தோடு களமிறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை தொகுதியில் சொக்கலிங்கம் சுயேட்சை வேட்பாளராக முத்தரையர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2,000 பேருடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த கூட்டத்தைப் பார்த்த அதிமுகவினர் கதிகலங்கி போயுள்ளனர்.
வழக்கு
இதனிடையே ஊர்வலமாக சென்ற முத்தரையர்கள் 300 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது மேலும் அச்சமூகத்தினரை கொந்தளிக்க வைத்துள்ளது.