சிதம்பரம் நடராஜர் கோவில் திருவிழா- கப்பலில் ஈழத் தமிழர்கள் வர 'முதல் முறையாக' மத்திய அரசு அனுமதி
சிதம்பரம் நடராஜர் கோவில் திருவிழாவுக்கு இலங்கையில் இருந்து ஈழத் தமிழர்கள் கப்பலில் வந்து பங்கேற்க முதல் முறையாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
டெல்லி: சிதம்பரம் நடராஜர் கோவில் திருவிழாவுக்கு இலங்கையில் இருந்து ஈழத் தமிழர்கள் கப்பலில் வந்து பங்கேற்க முதல் முறையாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதன் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 1-ல் தேர்த் திருவிழா, 2-ல் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது.
டிசம்பர் 3 இரவு முத்துப்பல்லக்கு வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் இருந்து தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் ஆண்டுதோறும் வந்து பங்கேற்பது வழக்கம்.
இம்முறை இலங்கையில் இருந்து கப்பலில் ஈழத் தமிழர்கள் அழைத்துவரப்பட உள்ளனர். இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து சிதம்பரத்துக்கு கப்பலில் வருவதற்கு அனுமதி கேட்கப்பட்டிருந்தது.
ஆனால் மத்திய அரசு காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து சென்னைக்கு வருவதற்கு அனுமதி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இலங்கையில் கடந்த ஆண்டு எழுத்தாளர் மறவன்புலவு சச்சிதானந்தத்தால் உருவாக்கப்பட்ட சிவ சேனை என்ற அமைப்பின் முயற்சிகள் மூலம் மத்திய அரசிடம் இந்த அனுமதி பெறப்பட்டிருக்கிறது.