கல்லம் மெக்ரேவுக்கு விசா தர மறுப்பது மலிவான தந்திரம்: கருணாநிதி
இதுகுறித்து, அவர் கேள்வி-பதில் வடிவிலான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
கேள்வி: சேனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குனருக்கு விசா வழங்க இந்தியா மறுத்து விட்டதாகச் செய்தி வந்திருக்கிறதே?
பதில்: ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திய கொடுமைகளையெல்லாம் உலகத்தார் கண்களுக்குத் தெரியும்படியாக ‘வீடியோ' படங்களை வெளியிட்டு, இனவாத இலங்கையின் சுய உருவத்தைத் தோலுரித்துக் காட்டிய நிறுவனத்தின் இயக்குனர் கெல்லம் மெக்ரே இந்தியாவிற்கு வருவதற்காக எட்டு மாதங்களுக்கு முன்பே விசா வழங்கக் கோரி விண்ணப்பம் கொடுத்ததாகவும், ஆனால் இந்திய அரசு மறுத்துவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.
தற்போது மீண்டும் இசைப்பிரியா கொலை செய்யப்பட்ட காட்சிகளை டெல்லியிலே வெளியிடுவதற்காக நவம்பர் 6 ஆம் தேதி வருவதற்கு விசாவுக்காக விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பத்தையும் இந்திய அரசு நிராகரித்துள்ளது என்பதை அவரே கூறியிருக்கிறார். கெல்லம் மெக்ரேவுக்கு ‘விசா' மறுத்தது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்லாமல், ‘சீப்பை எடுத்து ஒளிய வைத்திடும்' மலிவான தந்திரமாகும்.
கேள்வி: செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா வெற்றிகரமாக ஏவியுள்ள ‘மங்கள்யான்' விண்கலம் பற்றி?
பதில்: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து நேற்று பிற்பகல் 2.38 மணிக்கு செலுத்தப்பட்ட ‘மங்கள்யான்' விண்கலத்தைத் திட்டமிட்டப் பாதையில் துல்லியமாக நிலை நிறுத்தியதன் மூலம் நமது இந்திய விஞ்ஞானிகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் வரிசையில் நான்காவதாக இந்தியா இந்த முயற்சியில் இடம் பெற்றுள்ளது ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளத்தக்க செய்தியாகும்.
இதற்குக் காரணமான இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் அரும்பணியாற்றியிருக்கும் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் எனது இதயபூர்வமான பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.