கேரளா வெள்ளம்: இந்தியா எங்களிடம் உதவி கேட்கவில்லை.. ஐநா பரபரப்பு
நியூயார்க்: கேரளா வெள்ளம் குறித்து இந்தியா எந்த உதவியும் கேட்கவில்லை என்று ஐநா பரபரப்பு தகவல் அளித்துள்ளது.
கடந்த ஒரு மாதமாக கேரளாவில் நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்தது. மழையால் ஏற்பட்ட பாதிப்பால் இதுவரை 370க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரஸ் வெள்ளப்பெருக்கால் கேரளாவில் ஏற்பட்ட உயிர் சேதங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் ஏற்பட்ட இந்த வரலாறு காணாத பெருவெள்ளத்தினால் ஏற்பட்ட பேரிழப்பு, உயிர்பலி மற்றும் மக்களின் இடப்பெயர்வு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வேதனை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியா ஐக்கிய நாடுகள் சபையிடம் எந்த உதவியும் கேட்கவில்லை என்றும் அன்ட்டோனியோ குட்டெரஸ் கூறியுள்ளார். இது இந்தியர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிடம் கேரளாவின் இயற்கை பேரிடர்களை சரிசெய்ய போதுமான வசதிகள் உள்ளன. அதனால், இந்தியா எங்களிடம் எந்தவித உதவியும் கேட்கவில்லை. ஆனால், கேரளாவின் நிலைமையை அங்கு இருக்கும் எங்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்' என தெரிவித்தார்.