15 ஆண்டுகளாக பிரபஞ்ச அழகி பட்டத்தை வெல்ல முடியாமல் திணறும் இந்தியா
சென்னை: கோடானு கோடி அழகிகள் வசிக்கும் இந்தியாவில் இருந்து கடந்த 15 ஆண்டுகளில் ஒருவர் கூட பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வெல்லவில்லை.
2015ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. இந்தியா சார்பில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராதெலா கலந்து கொண்டார். போட்டியில் இந்தியா உள்பட 80 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.
பிலிப்பைன்ஸை சேர்ந்த பியா ஆலோன்சோ உர்ட்பாக் பிரபஞ்ச அழகியாக தேர்வானார்.
தவறு
பிரபஞ்ச அழகியா பியா தேர்வாகியிருந்தும் நிகழ்ச்சியை நடத்திய நடிகர் ஸ்டீவ் ஹார்வே கொலம்பியா அழகி அரியாத்னா குடியரஸ் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டதாக தவறாக அறிவித்தார். இதனால் முதலில் அரியாத்னாவுக்கு கிரீடம் சூட்டப்பட்டு பின்னர் அதை வாங்கி பியாவுக்கு சூட்டினர்.
கிண்டல்
பிரபஞ்ச அழகிப் போட்டியில் நடந்த குழப்பம் பற்றி பலரும் ஸ்டீவ் ஹார்வேவை கிண்டல் செய்தும், திட்டியும் வருகிறார்கள். இந்நிலையில் ஸ்டீவ் தனது தவறுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
சுஷ்மிதா சென்
பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் 1994ம் ஆண்டு பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்றார். பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.
லாரா தத்தா
சுஷ்மிதா சென்னை அடுத்து 2000ம் ஆண்டு லாரா தத்தா பிரபஞ்ச அழகியாக மகுடம் சூட்டப்பட்டார். பட்டம் வென்ற பிறகு சுஷ்மிதாவை போன்றே லாராவும் சினிமா படங்களில் நடிக்க வந்துவிட்டார்.
ஊர்வசி
இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட ஊர்வசியால் முதல் 15 இடங்களுக்குள் கூட வர முடியவில்லை.
15 ஆண்டுகள்
லாரா தத்தாவுக்கு பிறகு 15 ஆண்டுகளாக இந்திய அழகி யாரும் பிரபஞ்ச அழகியாக தேர்வாகவில்லை. தவறாமல் போட்டியில் கலந்து கொண்டாலும் இந்திய அழகிகளால் பட்டம் வெல்ல முடியாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.