சென்னையில் அரசு ஊழியர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி!
அகில இந்திய மாநில அரசு ஊழியர்க சம்மேளனத்தின் 16வது தேசிய மாநாட்டையொட்டி பேரணி இன்று சென்னையில் நடைபெற்றது.
சென்னை : அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் 16வது தேசிய மாநாட்டையொட்டி சென்னையில் அரசு ஊழியர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல், அவுட் சோர்சிங் முறையை கைவிடவேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் 16வது தேசிய மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், மாநிலங்களவை மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மற்றும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
மாநாட்டிற்கு முன்னதாக, சென்னை அண்ணாசாலையில் இருந்து சேப்பாக்கம் வரை அரசு ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பேரணி நடந்தது. இதில் மாநாட்டின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பேரணியின் போது அனுமதி இல்லாமல் ஹெலிகேம் பயன்படுத்தியதை அடுத்து, போலீஸார் அதை பறிமுதல் செய்தனர். இதனால், சிறிது நேரம் பேரணி தடைபட்டது. திருவல்லிக்கேணி துணை ஆணையர் தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.