சென்னை வந்த கொரிய கப்பல்கள்: இந்தியா – தென் கொரியா கூட்டு பயிற்சி
இந்தியா கடற்படையும் - தென்கொரியா கடற்படையினரும் இணைந்து சென்னையில் கூட்டு பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இதற்காக தென்கொரிய கடற்படையினருக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளன.
சென்னை துறைமுகத்திற்கு வந்த ‘சோய்யங்' மற்றும் ‘சியோஜி' என்ற அந்த இரண்டு கப்பல்களில் வந்த கடற்படையினரை இந்திய கடற்படையினர் கௌரவித்து வரவேற்றனர்.
இரண்டு கப்பல்களுக்கான கடற்படை பொறுப்பதிகாரி அட்மிரல் ஜங் சூ சூன், இன்று மாலை கடற்படை தலைமையகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். என்னமாதிரியான பயிற்சி மேற்கொள்ளப்படும் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.
தென்கொரிய கப்பல், தென் சீன கடலில் எந்த வித சிக்கலையும் சந்திக்கவில்லை என்றும் அவர் கூறினார். சீனா, வியட்னாம் நாடுகளுடன் நட்புறவை மேற்கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறினார்.
சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ள சோய் கப்பலில் 227 பேர் பயணிக்க முடியும் என்பதுடன் சியோஜி கப்பலில் 134 பேர் பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்களுடன் ஐ.என்.எஸ் ராஜ்புத் மற்றும் ஐ.என்.எஸ் சுமித்ரா போர்க்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டுப்பயிற்சிக்காக தென்கொரிய கப்பல் 12 நாடுகளைக் கடந்து 20,240 நாட்டிகள் மைல்கள் பயணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.