இனி எல்லாம் இப்படித்தான்.. சர்க்கரை விலை உயர்வின் பின்னணியில் சர்வதேச அரசியல்?
கருணாநிதியோ, ஜெயலலிதாவோ முதல்வராக இருந்தால் இப்படி ஒரு செயல் திட்டத்தை மத்திய அரசால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது. ஆனால், இப்போது டெல்லியில் கை காட்டினால் தமிழகத்தில் எல்லாம் நடக்க ஆரம்பித்துள்ள
Recommended Video
சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை ஒரு கிலோ ரூ.13.50 என்ற விலையிலிருந்து கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்த்தப்பட்டு கிலோ ரூ.25 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு மிக முக்கியமான விஷயம் என்பதை நகரவாசிகள் பலரும் இன்னும் உணரவில்லை என்பது இதில் பெரும் சோகம். மெர்சலோ, கமல் எண்ணூர் விசிட்டோ பெற்ற முக்கியத்துவத்தில் பாதியை கூட இந்த பிரச்சினை இன்னும் பெறவில்லை என்பதற்கு காரணம், இது கிராம, ஏழை, எளிய மக்களின் பிரச்சினை என்பதுதான்.
சர்க்கரை விலை உயர்வு என்பது அதோடு முடிந்துவிடும் ஒரு பிரச்சினை கிடையாது. இது மேலும் பல பூதாகர விளைவுகளுக்கான துவக்க புள்ளி.
அச்சப்பட்ட ஆட்சியாளர்கள்
ரேஷன் கடைகள். நகரவாசிகள் பலரும் காலடி எடுத்து வைக்காத இடம். ஆனால், இதுதான், கிராமப்புறங்களில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் ஒரே உணவு ஆதார நம்பிக்கை. தமிழகத்தின் எந்த ஒரு ஆட்சியிலும் ரேஷன் கடை பொருள் வினியோகத்தில் மட்டும் ஆட்சியாளர்கள் கை வைக்கவே மாட்டார்கள். காரணம், அது ஹை-வோல்டேஜ் மின்சாரத்தை போன்ற டாப்பிக்.
ஏழைகள் வாழ்க்கை முக்கியம்
திமுக தலைவர் கருணாநிதியோ, மறைந்த ஜெயலலிதாவோ, யாருடைய ஆட்சியிலுமே ரேஷன் கடைகளில் ஒரு பிரச்சினை என்றால் உடனே உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஏழை, எளியவர்கள் மீதான அக்கறை என்றும் இதை பார்க்கலாம், வாக்களிக்க கூடியவர்களில் பெரும்பகுதியினர் ஏழை, எளிய மக்கள்தான் என்ற தேர்தல் சார்ந்த நோக்கம் என்றும் இதை பார்க்கலாம்.
உலக வர்த்தக ஒப்பந்தம்
ஆனால், 'உலக வர்த்தக ஒப்பந்தம்' என்ற ஒற்றை சொல்லாடல் இன்று ஏழை, எளியவர்களின் வயிற்றில் அடித்துள்ளது. ரேஷன் கடை மூலமாக, மக்களுக்கு மலிவு விலையில் அரிசி போன்ற உணவுப் பொருள்களைக் கொடுக்கக்கூடாது என்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம். உணவுக்காக மேலை நாடுகளை நோக்கி கையேந்த வைக்க வேண்டும் என்ற சதியின் பின்னணியில் உருவான ஒப்பந்தம் இது.
உணவுக்கான உரிமை
உணவுப் பொருள்களுக்கான மானியம் மற்றும் விவசாயிகளுக்கான மானியத்தையும் முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் மற்றொரு சாராம்சம். வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்பது அதன் அடுத்த கண்டிஷன். மொத்தத்தில் உணவுக்கான உரிமையை இந்தியாவில் இருந்து பறிக்க வேண்டும் என்பதே ஒப்பந்த நோக்கம்.
ரேஷன் கடைகளில் டாப்
பொதுப்பங்கீடு திட்டத்தில் வட மாநிலங்கள் மிகவும் மோசம். அங்கு பட்டினி சாவுகள் சகஜம். ஆனால், தென் மாநிலங்கள் ரேஷன் கடை வினியோகத்தில் அசத்துகின்றன. அதிலும் தமிழகம் டாப். ஏதோ ஒன்றிரெண்டு குற்றச்சாட்டுகள் எழுமே தவிர, உணவுப் பொருள் இல்லை என கைவிரித்த வரலாறு கிடையாது. ஆனால், படிப்படியாக உணவு பொருள் மீதான மானியத்தை குறைத்து, கடைசியில் ஒன்றும் இல்லை என கூறி, ரேஷன் கடைகளை முற்றிலும் அழிக்கும் வேலை நடந்து கொண்டுள்ளது.
எல்லாம் நடக்கிறதே
கருணாநிதியோ, ஜெயலலிதாவோ முதல்வராக இருந்தால் இப்படி ஒரு செயல் திட்டத்தை மத்திய அரசால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது. ஆனால், இப்போது டெல்லியில் கை காட்டினால் தமிழகத்தில் எல்லாம் நடக்க ஆரம்பித்துள்ளது. ஏழைகள் வயிற்றில் அடிப்படும் அரங்கேறியுள்ளது. தமிழகத்திற்கு வழங்கும் சர்க்கரை அளவை குறைத்து விலை ஏற்றத்திற்கு காரணமாகிவிட்டது. 2 கிலோ சர்க்கரையை ரூ.27க்கு வாங்கி வந்த மக்களுக்கு ரூ.50 என்பது மிகப்பெரிய விலை. இனிமேல் அதுவும் சந்தை விலையில்தான் கிடைக்கப்போகிறது என்று தெரியாத அப்பாவிகள் அவர்கள். ஏற்கனவே 'மே17' இயக்கத்தின் திருமுருகன் காந்தி இதுகுறித்த எச்சரிக்கையைவிடுத்திருந்தார். அவர் பல மாதங்கள் முன்பு அதை கூறியபோது, 'தேச துரோகி' என்று கடந்து சென்றனர் ஆளும் வர்க்க ஆதரவாளர்கள். ஆனால், இன்றோ, அவர்கள் அடி மடியிலும் கை வைத்து பணம் பறிக்கப்பட ஆரம்பித்துள்ளது.