இலங்கைக்கு கால நீட்டிப்புக் கூடாது.. ஐ.நா.வில் வரும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க ஸ்டாலின் கோரிக்கை
இலங்கைக்கு கால நீட்டிப்பு கொடுப்பதற்காக நாளை ஐ.நா.வில் கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: போர்க்குற்ற விசாரணையை மேலும் இரு வருடங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆணித்தரமாக எதிர்த்து, மனித உரிமைகளின் பக்கம் நின்று வாதிட வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திரமோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பான நடவடிக்கைகள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவை குறித்து சுதந்திரமானதும், நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பம் முதல் உறுதியாக இருந்து வருகிறது. அதற்காக தொடர்ந்து போராடியும் வருகிறது.
பொது வாக்கெடுப்பு
அதே நேரத்தில் ஈழத்தமிழர்களின் விருப்பத்திற்கேற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடையே ஐ.நா. சபையின் மேற்பார்வையில் "பொது வாக்கெடுப்பு" நடத்தவும், இலங்கையில் புதிதாக உருவாக உள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தில், இலங்கையில் உள்ள தேசிய இனங்கள் அனைத்தையும் சமமாகப் பாவித்து, முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்கு கிடைத்திடும் வகையில் சட்டப்பிரிவுகளை உருவாக்கவும் இலங்கை அரசை இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும் என்றும் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் கோரிக்கை வைத்து வருகிறது.
டெசோ மாநாடு
ஈழத்தமிழர்களின் நலன் காக்க டெசோ மாநாட்டை டெல்லியிலும், சென்னையிலும் நடத்தி ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமையை பாதுகாக்கும் 14 தீர்மானங்களை 12.8.2012 அன்று நிறைவேற்றி, அந்த தீர்மானங்களை நானே ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் ஆகிய வற்றிற்கு நேரடியாக கொண்டு சென்று கொடுத்திருக்கிறேன். அப்போது, மத்திய அரசின் முன்னாள் அமைச்சர் நண்பர் டி.ஆர்.பாலு அவர்களும் உடனிருந்தார்.
ஈழத் தமிழர்களுக்கு அநீதி
ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்து சர்வ தேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தலைமையில் சுதந்திரமான விசாரணை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் தீர்மானித்து, அந்த விசாரணை எவ்வித முன்னெடுப்பும் இன்றி, இன்றுவரை ஈழத்தமிழர்களுக்கு எந்த நீதியும், நியாயமும் வழங்காமலும், அவர்களுக்குச் சுயமரியாதையுடன் கூடிய கண்ணியமான வாழ்க்கை முறையை ஏற்படுத்தாமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஐ.நா.வில் அதிர்ச்சி தீர்மானம்
அன்றிலிருந்து இதுபோன்ற விசாரணைக்கு உள்நோக்கத்துடன் இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்து அடம்பிடித்து வருகிறது. இந்நிலையில் 22.3.2017 அன்று ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் "போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க மேலும் இரு வருடங்கள் கால அவகாசம் கொடுக்கலாம்" என்ற தீர்மானத்தை அமெரிக்காவும், இங்கிலாந்தும் கைகோர்த்துக் கொண்டு வருவது, தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படும் நீதி என்பதால் அதிர்ச்சியளிக்கிறது.
மனித உரிமைகளுக்கு சவால்
ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு எத்திசையிலிருந்து அழுத்தம் வந்தாலும், எவ்விதத்திலும் இலங்கை அரசு ஒத்துழைக்க மறுப்பது ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் மட்டுமல்ல - சர்வதேச அரங்கில், மனித உரிமைகளுக்கே விடப்பட்டுள்ள சவாலாகும்.
கருப்பு அத்தியாயம்
ஆகவே ஈழத்தமிழர்களின் மீதான இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் உள்ளிட்டவை குறித்த விசாரணைக்கு மேலும் கால அவகாசம் அளிக்கக்கூடாது என்பதில் மத்திய அரசு மிகவும் உறுதியாக இருந்து அழுத்தம் திருத்தமாக எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஐ.நா. மன்றத்தின் உத்தரவுக்கே இலங்கை அரசு கட்டுப்பட மறுப்பதும், அதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கைகொடுப்பதும் அகில உலக மனித உரிமைகள் வரலாற்றில் அழிக்க முடியாத கருப்பு அத்தியாயமாக ஆகிவிடும்.
ஆணித்தரமான எதிர்ப்பு
ஆகவே போர்க்குற்ற விசாரணையை மேலும் இரு வருடங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று நாளைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தி ல் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆணித்தரமாக எதிர்த்து, மனித உரிமைகளின் பக்கம் நின்று வாதிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய அரசு உறுதி
வரலாற்றையே கொச்சைப்படுத்தும் மனித உரிமை மீறல்களுக்கும், ஈழத்தமிழர்களின் மீது அத்துமீறி நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் காரணமான இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைய விசாரணையில் கடுமையாகத் தண்டிக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் மிகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.