சீன அதிபர் கோட்டை விட்ட இடத்தில் கொடி நாட்டிய மோடி! இந்தியா பக்கம் அமெரிக்க ஐடி நிறுவனங்கள் பார்வை
சென்னை: சிலிக்கான்வேலி.. உலக டெக் நிறுவனங்களின் சங்கமத்தின் பெயர் அது. அமெரிக்க மேற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கில்தான், உலகை உள்ளங்கைக்குள் கட்டிப்போட்டுள்ள கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் etc..etc.. என பல நிறுவனங்கள் தலைமையகங்களை அமைத்துள்ளன.
உலகின் எந்த ஒரு மூலையிலும், இவர்கள் பங்களிப்பு இன்றி இணையத்தில் ஒரு அணுவும் அசையாது.
சீனாவுக்கும் ஆசை
அப்படிப்பட்ட சிலிக்கான்வேலி நிறுவனங்களை தங்கள் நாட்டுக்கு ஈர்ப்பதற்கு எந்த நாடுதான் ஆசைப்படாது..? அப்படித்தான் ஆசைப்பட்டு கடந்த வாரம்வாக்கில், அந்த பக்கமாக போனார், உலக வல்லரசுகளின் ஒன்றான சீனாவின் அதிபர், ஜி ஜிங்பிங்.
சீனாவின் பிடிவாதம்
பேஸ்புக் அலுவலகம் சென்று மார்க் சக்கர்பெர்க்குடன் சந்தித்து பேசினார். சக்கர்பர்க்கும், சீன மொழியில் பேசி அசத்தி, எப்படியாவது சீனாவில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று, பிரயத்தனப்பட்டார். ஆனால் முதலீடு வேண்டும், அதே நேரம், தங்கள் நாட்டிலுள்ள கட்டுப்பாட்டை தளர்த்த மாட்டோம் என்று ஜி ஜிங்பிங் உறுதியாக கூறிவிட்டார். இதனால் புஸ் என்று போனது அமெரிக்க டெக்னாலஜி நிறுவன அதிபர்கள் முகங்கள்.
ரகசிய திருட்டு குற்றச்சாட்டு
சீனாவும், அமெரிக்காவும், உலகில் தங்கள் வல்லாதிக்கத்தை நிலைநாட்ட தங்களுக்கே உரித்தான பாணியில் முயல்கின்றன. எனவே சீனாவில் கூகுள், பேஸ்புக் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு கட்டுப்பாடற்ற செயல்பாட்டு அனுமதி வழங்கப்படவில்லை. எங்கள் நாட்டு ரகசியங்களை நீங்கள் திருடிவிடுவீர்கள் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டும் சீனா, மாற்றாக, தங்களுக்கென்று சமூக வலைத்தளங்களை உருவாக்கி வைத்துள்ளது.
மோடியின் அட்டாக்
இதைத்தான் நேற்று பேஸ்புக் ஆபீசில் மோடி சுட்டிக்காட்டி அல்லது குத்திக்காட்டியே பேசினார். "சீனாவிலுள்ள சமூக வலைத்தள கட்டமைப்பு முற்றிலும் வேறுபட்டது (அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது) ஆனால் நான் அதிலும் உறுப்பினராக இருக்கிறேன். சீன மொழியில் சீன அதிபருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்" என்று கூறி, தனது சமூக வலைத்தள ஆர்வத்தை பறைசாற்றியதோடு, சீனாவுக்கு குட்டும் வைத்தார் மோடி.
சீனா தோல்வி
சீன அதிபர் ஜிங்பிங்கின் சிலிக்கான்வேலி சுற்றுப்பயணத்தின்போது, தொடர்ச்சியாக, சீனா மீது அமெரிக்காவும், அமெரிக்கா மீது சீனாவும் பரஸ்பரம் குறைசொன்ன பிரஸ் மீட்கள்தான் அதிகம். எனவே அந்த பயணம் தோல்வியில்தான் முடிந்தது. அதேநேரம் மோடி சென்ற சிலிக்கான்வேலி பயணம் முற்றிலும் மாறுபட்டது.
ஈர்த்த மோடியின் பேச்சு
பிரதமராகும் முன்பே, சமூக வலைத்தளத்தில் தனக்கு உள்ள ஆர்வத்தை அடிக்கடி குறிப்பிட்டு பேசினார் மோடி. மேலும் இந்தியாவில் சமூக வலைத்தளம், இணையத்தின் பங்கு மிக அதிகம் என்பதை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார்.
குழந்தைக்கே பால் கொடுக்க மாட்டோம்
"குழந்தை அழும்போது பால் கொடுப்பதை கூட தள்ளிப்போட்டுவிட்டு, வாட்ஸ்சப்பில் மெசேஜ் அனுப்பும் பெண்கள் எங்கள் நாட்டில் அதிகம்", "பெண் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த செல்ஃபி படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி, பெரும் இயக்கமாக அதை மாற்றினோம்", "டிவிட்டரும், பேஸ்புக்கும் இந்தியர்களின் அண்டை வீட்டாராக மாறிவிட்டன". "டிவிட்டரால் ஒவ்வொருவருமே நிருபர்களாக மாறிவிட்டனர்" இவ்வாறெல்லாம் அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தாக்கம் பற்றி மோடி பேசி அவர்களுக்கு கள நிலவரத்தை எடுத்துரைத்தார்.
டிஜிட்டல் இந்தியாவுக்கு வெற்றி
இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தி கிராமங்களிலும், இணையசேவையை கொண்டுவந்து மக்களின் அறிவு ஏற்றத்தாழ்வை சமன்படுத்தும் ஒரு முயற்சியே, டிஜிட்டல் இந்தியா திட்டம். இத்திட்டத்தில் இணைய கூகுள், மைக்ரோசாப்ட் போன்றவை இசைவு தெரிவித்துள்ளது, மோடியின் சிலிக்கான்வேலி பயணத்தில் கிடைத்த பெரும் வெற்றியாகும். சீனாவின் போக்கால் கவலையடைந்திருந்த ஐடி நிறுவனங்கள் பரந்து விரிந்த இந்திய சந்தை தங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளன. மற்றொருபக்கம், அந்த நிறுவனங்களின் துணை கொண்டு இணையம், இந்தியாவில் எளியவர்களுக்கும் கிடைக்கப்போகிறது.
அனைத்தும் ஆன்லைனில்
சென்னையை சேர்ந்த, பொருளாதார வல்லுநர் ஒருவர் இதுபற்றி கூறுகையில், "தாம்பரத்தை சேர்ந்தவர் வாசுதேவன். அவரது மனைவி, அமேசானிலும், பிளிப்கார்டிலும் ஆடைகள் வாங்குகிறார். 4 வயது மகளுக்காக யூடியூப்பில் இருந்து வீடியோவும், ஆண்ட்ராயிடில் இருந்து கேம்களையும் டவுன்லோடு செய்து கொடுக்கிறார். அவரது தங்கை மோனிஷா, செல்ஃபிகளை எடுத்து பேஸ்புக்கில் போடுவது சந்தோஷப்படுகிறார். வாசுதேவன் சினிமா டிக்கெட்டுகளை புக்மைஷோவிலும், பீட்சாவை ஆன்லைனிலும் ஆர்டர் செய்கிறார். இவர்கள் அனைவரும் வாட்ஸ்சப்பின் பேமிலி குரூப்பால் இணைக்கப்பட்டுள்ளனர். இதுதான் இன்றைய இந்தியாவின் நிலையும்.
இந்தியாவுக்கு லாபம்
இணையமும், அது சார்ந்த பயன்பாடும் அனைவரிடமும் தாராளாக உள்ளது. இந்த நிலையில் இணையத்தின் வேகத்தை அதிகரிப்பதற்கும், கிராமங்களுக்கும் அதை கொண்டு செல்லவும், அமெரிக்க டெக்னாலஜி நிறுவனங்கள் வருகை மிகவும் பலன் தரும். இதன்மூலம் இணையதள சேவையின் கட்டணமும் குறையும். இணையம் தொடர்பான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்" என்றார்.