சென்னையில் உருவான நாட்டின் முதலாவது ஆளில்லா உளவு கவச வாகனம் 'முந்த்ரா'
சென்னை ஆவடி டாங்கி தொழிற்சாலையில் உருவான ஆளில்லா உளவு கவச வாகனமான முந்த்ரா கண்காட்சியில் வைக்கப்பட்டது.
சென்னை: சென்னை ஆவடியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கண்காட்சியில் ராணுவத்தின் ஆளில்லா உளவு வாகனமான முந்த்ராவும் இடம்பெற்றிருந்தது.
சென்னை ஆவடியில் உள்ள போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் அப்துல் கலாம் நினைவுதினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதனை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ தலைவரான கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் சென்னை ஆவடி டாங்கி தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட ராணுவத்துக்கான ஆளில்லா உளவு கவச வாகனமும் இடம்பெற்றிருந்தது. இந்த ஆளில்லா உளவு வாகனமானது கண்காணிப்பு மற்றும் கண்ணிவெடிகளை கண்டறியும் திறனை கொண்டது. இவற்றை நக்சல் பாதிப்பு பகுதிகளில் பயன்படுத்த துணை ராணுவப் படையினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த வாகனம் 52 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் ராஜஸ்தான் பாலைவனப்பகுதியில் பரிசோதிக்கப்பட்டது. 15 கிமீ சுற்றளவில் அணு ஆயுதங்கள் மற்றும் உயிரி ஆயுதங்கள் இருந்தால் அவற்றையும் முந்த்ரா கண்டறியும் திறனைப் பெற்றது.
இக் கண்காட்சியில் டிஆர்டிஓவின் ஏராளமான ராணுவ தளவடாங்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலு ராணுவத்தின் நவீன ரக கவச வாகனங்கள், ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் முறை ஆகியவை குறித்தும் கண்காட்சியில் விளக்கப்பட்டன.
அர்ஜூன் ரக டாங்கிகள், போர் விமானங்களின் பாகங்கள், ஆம்புலன்ஸ் பீரங்கி, நீர்மூழ்கி கப்பலில் பயன்படுத்தப்படும் ஆடைகள் உள்ளிட்டவையும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இக்கண்காட்சியை பொதுமக்களும் மாணவர்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.