'அன்னை தெரசாவிடம் ஆசி வாங்கலாம்... அப்துல் கலாமிடம் பூந்தொட்டி பெறலாம்!'
சென்னை: திரைப்படத் தயாரிப்பாளரும் ஓவியருமான ஏபி ஸ்ரீதர் இந்தியாவின் இரண்டாவது தந்திரக் கலை அருங்காட்சிக் கூடத்தை ஆரம்பித்துள்ளார்.
சென்னை தீவுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஓவியக் கூடத்தை ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தொடங்கி வைத்தார்.
கடந்த மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள வி.ஜி.பி.ஸ்நோ கிங்டம் வளாகத்தில் ஏ.பி. ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் உருவான இந்தியாவின் முதல் தந்திரகலை அருங்காட்சியகம் துவங்கப்பட்டது. இதற்குக் கிடைத்த அமோக வரவேற்பினைத் தொடர்ந்து சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள 39வது சென்னை புத்தகக் காட்சியில் இந்தியாவின் இரண்டாவது தந்திரகலை அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.
தந்திரக் கலை அருங்காட்சியகம்
ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரின் இந்த முயற்சி குறித்து ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் பேசுகையில், "ஸ்ரீதர் எனக்கு நீண்ட கால நண்பர். அவருடைய அனைத்து பயணத்திலும், நான் அவருடன் இருந்திருக்கிறேன். இந்த பயனத்திலும் நான் அவருடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தந்திரகலை அருங்காட்சியகம் என்பது இன்று சர்வதேச அளவில் புகழ் பெற்று வருகிறது. அதனை இந்தியாவுக்கு ஸ்ரீதர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஓவியங்களுடன் புகைப்படம்
ஓவியங்களுடன் நம்மை இனைத்து கொண்டு புகைப்படம் எடுத்து கொள்ளும் இதனை சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கண்டு மகிழ்வார்கள்," என்றார்.
பாரதியாருடன் செல்பி!
இந்த அருங்காட்சியகத்தில் திருவள்ளுவர் திருக்குறள் அரிச்சுவடியை கொடுப்பது போலவும், சேகுவேரா, பாரதியாருடன் செல்ஃபி எடுப்பது போலவும், அன்னை தெரசவிடம் ஆசி பெறுவது போலவும், அப்துல் கலாம் பூந்தொட்டி கொடுப்பது போலவும், காந்தியடிகள் ராட்டினம் கொடுப்பது போலவும் படங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. இந்தப் படங்களுக்குள் நீங்கள் போய் உங்களைப் படமெடுத்துக் கொள்வதுதான் இதன் சிறப்பு.
இன்று முதல் 13ம் தேதி வரை
இந்த தந்திரகலை அருங்காட்சியகம் இன்று 01.06.2016 முதல் 13.06.2016 வரை தீவுத்திடலில் அமைந்திருக்கும்.
3வது அருங்காட்சியகம் எக்ஸ்பிரஸ் அவென்யூவில்
இதே போன்று இந்தியாவின் மூன்றாவது தந்திரக் கலை அருங்காட்சியகம் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள எக்ஸ்ப்ரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும் இன்று முதல் துவங்கப்பட்டிருக்கிறது.