புகையிலை நல்லதா.... அன்புமணி கடும் கண்டனம்.. சிகரெட் லாபிக்கு எதிராக மோடி தலையிட கோரிக்கை
சென்னை: சிகரெட் லாபி மிக வலிமையாகி வருகிறது. உடனடியாக பிரதமர் மோடி தலையிட்டு அவர்களை ஒடுக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், பாமக தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
புகையிலைப் பொருட்களால் புற்று நோய் வராது என்று கூறியுள்ள பாஜக எம்.பியான திலீப் காந்திக்கு அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி செய்தியாளர்களிடம் பேசுகையி், புகையிலைப் பொருள்கள் மீது ஏப். 1-ஆம் தேதி முதல் 85 விழுக்காடு அளவில் எச்சரிக்கை விளம்பரம் செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், பாஜக மக்களவை உறுப்பினர் ஒருவர், புகையிலைப் பொருள்கள் பாதிப்பு குறித்து இந்தியாவில் எவ்வித ஆய்வுகளும் மேற்கொள்ளவில்லை என்று கூறியதால், இந்த விளம்பரம் செய்வதை மத்திய சுகாதாரத் துறை நிறுத்தியுள்ளது.
இது கண்டிக்கத்தக்கது. இந்தப் பொருள்களைப் பயன்படுத்துவதால் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். எனவே, அறிவித்தப்படி விளம்பரத்தை வெளியிட வேண்டும்.
இந்தியாவில் சிகெரட் லாபி மிகக் கடுமையாக உள்ளது, வலிமையாகி வருகிறது. மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும். குறிப்பாக பிரதமர் நேரடியாக தலையிட்டு இந்த லாபியை ஒடுக்க வேண்டும்.
புகையிலைக்கு எதிராக அரசாங்கமே போராட வேண்டும். அது அரசின் கடமையும் கூட. நான் மத்திய அமைச்சராக இருந்தபோது, சிகரெட் பெட்டியில் பட எச்சரிக்கையை வெளியிட மிகக் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. 120 எம்.பிக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி நாங்கள் அதை அமல்படுத்தினோம்.
புகையிலைப் பொருளுக்கும், புற்றுநோய்க்கும் சம்பந்தம் இல்லை என்று ஒரு எம்.பி கூறுவது வருத்தம் தருகிறது. சர்க்கரை வியாதியை விடவா புகையிலைப் பொருள் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று இன்னொரு எம்.பி கேட்கிறார். இதெல்லாம் நாட்டுக்கே அவமானமானவையாகும்.
இப்படிப்பட்டவர்களை நாடாளுமன்றக் குழுவிலேயே வைத்திருக்கக் கூடாது. நீக்கி விட வேண்டும். இதுபோன்ற விஷயங்களை இனியும் எம்.பிக்கள் பேசக் கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அன்புமணி ராமதாஸ்.