2017ல் மறக்க முடியாத பெண் ஜாம்பவான்கள்... மிதாலி ராஜ், கவுரி லங்கேஷ், பவானிக்கு சல்யூட்!
2017ம் ஆண்டில் மறக்க முடியாத பெண் ஜாம்பவான்களாக தங்கள் துறையில் திகழ்ந்த பெண்களைப் பற்றி பார்க்கலாம்.
சென்னை : எதையும் சாதிக்காமல் வாழ்வை அதன் போக்கில் வாழ்பவனுக்கு ஒவ்வொரு ஆண்டும் வெறும் நாட்களாகவே கழிகின்றன. ஆனால் ஒவ்வொரு நாளையும் தன் வாழ்நாளில் அர்த்தமுள்ளதாக்கி வாழ்வில் லட்சியத்தை அடைய நினைப்பவர்களுக்குத் தான் அந்த ஆண்டு சிறப்பானதாக அமையும்.
2017ம் ஆண்டில் இப்படி தாங்கள் சார்ந்த துறையில் சிறப்பாக தங்களை ஜொலிக்க வைத்த பெண் ஜாம்பவான்களைத் தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் இல்லாத துறையே இல்லை எனலாம். இதில் விளையாட்டுத் துறையும் விதிவிலக்கல்ல.
கிரிக்கெட் என்றாலே ஆண்கள் விளையாடும் விளையாட்டு இதில் பெண்கள் ரசிகர்கள் மட்டுமே பெண்களுக்கும் கிரிக்கெட்டிற்கும் சம்பந்தம் இல்லை என்று நக்கலடித்தவர்களை மொக்கை செய்தார் மிதாலி ராஜ். மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ் உலக சாதனை படைத்தார். இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 34 ரன்கள் எடுத்த போது மிதாலி ராஜ் இந்த சாதனையைப் படைத்தார்.
பெண் சச்சின் டெண்டுல்கர் மிதாலிராஜ்
சாதனை படைத்த மிதாலி ராஜ் பேட்டி ஒன்றின் போது உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு, இதே கேள்வியை ஆண் கிரிக்கெட் வீரர்களிடம் போய் உங்களுக்குப் பிடித்த பெண் கிரிக்கெட் விளையாட்டு வீரர் யார் என்று கேட்பீர்களா என்று கேட்டு அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். பெண்கள் கிரிக்கெட் என்றால் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுவதில்லை நாங்களும் பயிற்சி எடுத்து கஷ்டப்பட்டு தான் விளையாடுகிறோம் என்று அனைவரின் நறுக்கென்று கேள்வி கேட்டு அசத்தினார் மிதாலி ராஜ்.
தைரியமான பெண்மணி கவுரிலங்கேஷ்
பத்திரிக்கை ஆசிரியரும், இலக்கியவாதியுமான கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னரே பலருக்கும் அவரை தெரிய வந்திருக்கும். ஆனால் உண்மையில் இடதுசாரி சிந்தனைக் கொண்ட இலர் 1980ம் ஆண்டு தன்னுடைய ஊடகப் பணியைத் தொடங்கியவர். ஜனநாயம், கருத்துச் சுதந்திரம் மீது நம்பிக்கை கொண்டிருந்த கவுரி லங்கேஷ் தலித் உரிமைகள், மத சார்பு சிந்தனைகளுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக மர்ம நபர்களால் தன்னுடைய வீட்டு வாசலில் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டார். ஜனநாயகத்தின் குரல்வலை நெரிக்கப்பட்ட இந்த ஆண்டு வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டு.
திருநங்கை நீதிபதி ஜோயிதா
2017ல் இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கை ஒருவர் மேற்வங்க மாநில லோக் அதாலத் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கொல்கத்தாவை சேர்ந்த 29 வயது திருநங்கை ஜோயிதா மாண்டல் தான் நீதிபதியாக பதவியேற்றது திருநங்கைகள் சமூகத்திற்கு நல்லது நடக்கும் என நம்புவதாக கூறி இருந்தார். திருநங்கைகளை பொறுத்த வரை அவர்கள் அதிகம் படிக்க வாய்ப்பு இல்லாத நிலையில் அரசுத் துறையில் வேலை கிடைத்தால் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட மாட்டார்கள் என்றும் ஜோயிதா கூறியிருந்தார்.
வாள்வீச்சு சாதனையாளர் பவானிதேவி
வாள்வீச்சு போட்டியில் பெண்களும் பங்கேற்கலாம் அதில் பதக்கத்தையும் வெல்லலாம் என்பதை உணர்த்தியவர் தமிழக வீராங்கனை பவானி தேவி. ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச சாட்டிலைட் உலகக் கோப்பை வாள்வீச்சுப் போட்டியில் தங்கம் வென்று, வரலாற்றுச் சாதனை படைத்தார் பவானி தேவி. இந்த சாதனை பவானி தேவிக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே வாள்வீச்சு சண்டையில் கிடைத்த முதல் தங்கப் பரிசு என்பது தான் ஹைலைட்டான விஷயம்.