ஈழ இனப்படுகொலை விசாரணையை அப்படியே முடமாக்கிவிடும் ஆபத்து… வேல்முருகன் கண்டனம்
ஈழ இனப்படுகொலை விசாரணையை அப்படியே முடமாக்கிவிடும் ஆபத்து உருவாகியுள்ளதற்கு வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: இலங்கை மீதான இனப்படுகொலை விசாரணையை முடமாக்கும் முயற்சிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி 27ந் தேதி தொடங்கி ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில், 2009 ஈழ இனப்படுகொலை விசாரணையை அப்படியே முடமாக்கிவிடும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
இந்தச் சதியை அரங்கேற்றும் வண்ணம் புதியதொரு தீர்மானத்தைத் தாக்கல் செய்திருக்கின்றன அமெரிக்கா, பிரிட்டன், மொன்டெனெக்ரோ, மெசடோனியா ஆகிய நான்கு நாடுகளும்.
பன்னாட்டு நீதிபதிகள்
ஐ.நா மனித உரிமை ஆணையர் செய்ட் ராட் அல் ஹுசைன் இந்த 34ஆவது கூட்டத்தொடரில் தாக்கல் செய்வதற்கான அறிக்கையில் முக்கியமானதொரு விடயத்தை இலங்கையிடம் வலியுறுத்தியிருந்தார். அது இந்த விசாரணையில் பன்னாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் புலனாய்வாளர்களையும் அனுமதிக்க வேண்டும் என்பது.
புதிய தீர்மானம்
இதனை கடந்த பிப்ரவரி 10ந் தேதி இலங்கை அரசுக்குத் தெரிவிக்கிறார் அல் ஹுசைன். உடனடியாகவே அதனை நிராகரித்து ஹுசைனுக்குப் பதில் அனுப்புகிறது இலங்கை அரசு. இந்தப் பின்னணியில்தான் மேற்கண்ட நான்கு நாடுகளும் புதிய தீர்மானத்தைக் கொண்டுவந்தன.
2 ஆண்டு கால நீட்டிப்பு
அந்த தீர்மானத்தில், விசாரணையை நிறைவேற்ற மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் வேண்டும், கலப்பு விசாரணை (பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய விசாரணை) என்பதற்குப் பதில் இலங்கை அரசின் சம்மதத்துடனான விசாரணையாகத்தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வழி ஏற்படுமா?
அப்படியென்றால் மேற்கண்ட நான்கு நாடுகளையும் இத்தகையதொரு நிலை எடுக்கச் செய்து இலங்கைக்கு உதவும் சக்திவாய்ந்த ஓர் உற்ற நண்பன் இருக்கத்தானே செய்கிறார். இந்த தீர்மானம் 22ந் தேதியன்று அவையில் விவாதத்திற்கு வைக்கப்பட்டது. விவாதத்தில் திருத்தங்களுக்கோ மாற்றங்களுக்கோ வழி ஏற்பட்டால் அது செய்யப்பட்டு பின் வாக்குக்கு விடப்படலாம். ஆனால் அதற்கு வழி ஏற்படுமா என்பதுதான் கேள்விக்குறியே. திட்டமிட்டே காரியங்கள் நடப்பதுதான் வேதனையே.
தமிழனத்தின் எதிர்ப்பார்ப்பு
இந்த தீர்மானத்தை கட்டாயம் எதிர்த்துத்தான் இந்தியா வாக்களிக்க வேண்டும். அதோடு அல் ஹுசைன் கோரும் பன்னாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய விசாரணைக்கு வகை செய்து அதை துரிதப்படுத்தும்படியாக திருத்தங்களைச் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மறு தீர்மானத்தையே கொண்டுவர வேண்டும். இதுதான் தமிழினத்தின் எதிர்பார்ப்பு. ஆனால் அப்படி நடந்துகொள்ளுமா என்ற கேள்விகூட எழுமா தெரியவில்லை.
இந்தியா எந்தப் பக்கம்?
ஏனென்றால் இந்திய அரசு தன்னைப் பற்றி ஒரு மாறுபட்ட சித்திரத்தையே தமிழக மக்களின் மனதில் பதித்திருக்கிறது. பதித்துக் கொண்டுமிருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்பது போலத்தான் இப்போது ஜெனீவாவில் இந்த தீர்மானத்தின் மீதும் தனது நிலையை இன்னும் அது தெளிவுபடுத்தவேயில்லை.
கதை விடக் கூடாது..
அதேநேரம் 2015ல் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை அந்த நாடே இன்று ஏன் முடக்க வேண்டும் என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. இந்தக் கேள்விக்கு புவிசார் அரசியல் (ஜியோ பாலிட்டிக்ஸ்), சீன-இலங்கை நேசம் போன்ற கதைகளையெல்லாம் விடையாக்க முடியாது என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
எதிரி யார்?
வரலாற்றிலிருந்தே அந்த விடையை நாம் தெரிந்துகொள்வோம். உண்மையில் தமிழன் என்ற இனத்திற்கு இந்த உலகில், பூமியில் எதிரி யார்? நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள், நிச்சயம் உங்களுக்குத் தெரியாமலிருக்காது அந்த எதிரி யார் என்பது!
யார் பொறுப்பு?
இன்றுவரை தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் எதிராக நடந்தேறும் காரியங்களுக்கெல்லாம் யார் பொறுப்போ அவர்கள்தான் தமிழினப் படுகொலை விசாரணையை முடமாக்கப் பார்ப்பதற்கும் பொறுப்பு என்று ஏன் சொல்ல முடியாது?
அறிவுப் பூர்வ அணுகுமுறை
எதிரியை அடையாளம் காண்பதில் அறிவுப்பூர்வமான அணுகுமுறை தேவை. அடையாளம் கண்டபின் தெளிவான திடமான மனநிலையும் தேவை. அப்போதுதான் நமது வாழ்வுரிமைக்காக உறுதியுடன் நாம் போராட முடியும். ஈழ இனப்படுகொலையில் தமிழினத்திற்கு நீதி கிடைக்க போராடித்தான் ஆக வேண்டும் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி உணர்ந்தேயிருக்கிறது. அதில் உணர்வுபூர்வமாக பங்கேற்க தமிழக மக்களை அறைகூவி அழைக்கிறது என்று வேல்முருகன் கூறியுள்ளார்.