இலங்கை அதிபர் பதவியில் இருந்து ராஜபக்சேவை மத்திய அரசு அகற்ற வேண்டும்- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: இலங்கையில் தமிழர் நலனுக்கும் இந்தியாவுக்கும் எதிராக இருக்கும் மகிந்த ராஜபக்சேவை அதிபர் பதவியில் இருந்து மத்திய அரசு அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் ஜி.கே.வாசன் குடும்பத்தில் ஒரு அங்கமாக இருக்கும் பட்டுக்கோட்டை ரங்கராஜன் மட்டுமே சென்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான சொத்துகளுக்கு இடையூறு செய்யமாட்டோம் என்று ஜி.கே.வாசன் பெருந்தன்மையுடன் கூறியுள்ளார்.
வாசனுக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. அதையும் மீறி ஒரு சில இடங்களில் காங்கிரஸ் சொத்துகளை யாரேனும் அபகரித்தால் நானே நேரில் சென்று மீட்பேன்.
தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமையும். அல்லது காங்கிரஸ் ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகும்.
எங்களைப் பொறுத்தவரை 5 ராமேஸ்வரம் மீனவர்களுக்குத் தூக்கு தண்டனை விதித்தது இலங்கை நீதித்துறை அல்ல. இலங்கையின் அதிபராக இருக்கும் ராஜபக்சேதான்.
இலங்கையில் தமிழர் நலனுக்கு எதிராக இருப்பவர் ராஜபக்சே. உலக நாடுகளில் தங்களுக்கு இடையூறாக எதிராக இருக்கும் ஒரு அரசை அகற்றுவது வல்லரசுகள் பணி.
அந்த வகையில் இலங்கையில் அதிபர் ராஜபக்சேவை அகற்றிவிட்டு இந்தியாவுக்கு சாதகமான ஒரு அதிபரை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
எங்களைப் பொறுத்தவரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கமே. ராஜிவ் கொலையில் தூக்கு விதிக்கப்பட்ட மூவரது தூக்கு தண்டனையை நிறைவேற்றியே ஆக வேண்டும்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.