நாளை பக்ரீத் பண்டிகை... இஸ்லாமியத் தலைவர்கள் வாழ்த்து
சென்னை : நாளை (வியாழன்) நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
இறைத்தூதர் இப்ராகீம்(ஸல்)அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த தியாகங்களை நினைவு கூறும் வகையில் இந்த திருநாளை கொண்டாடும் மக்களுக்கு எனது இதயம் கனிந்த தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
பன்முகத்தன்மை மக்கள் கொண்ட நமது நாட்டில் கோபம்,பொறாமை போன்ற தீய குணங்களை நீக்கி அன்பு, சகிப்புத்தன்மை போன்ற உயர்ந்த குணங்களை நமது வாழ்க்கையில் தவறாது கடைப்பிடித்து,அனைத்து மக்களோடும் நல்ல உறவுகளை பேணி சிறந்த மனிதர்களாக வாழ இந்நாளில் உறுதி ஏற்போம்.
இவ்வாறு தனது அறிக்கையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி பக்ரீத் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.