நாடு முழுவதும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது : யஷ்வந்த் சின்ஹா 'பொளேர்'
நாடு முழுவதும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது என்று யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
வாரணாசி : இந்திரா காந்தி காலத்தில் இருந்த நெருக்கடி நிலையை விட நாடு தற்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில் இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை நகைச்சுவையாக்கி விட்டார்கள் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து சமீபத்தில் வெளியேறிய அக்கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வாரணாசியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றினார்.
அப்போது பேசிய அவர், இந்தியா தற்போது இந்திரா காந்தி காலத்தின் நெருக்கடி நிலையை விட மோசமான நிலையில் இருக்கிறது. நாடு முழுவதும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது.
நாட்டின் ஜனநாயகம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்போதைய ஆட்சியாளர்கள் அரசியலமைப்புச் சட்டத்தையையே நகைச்சுவை ஆக்கிவிட்டார்கள். அனைத்து அரசு அமைப்புகளும் தவறான வழிக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆட்சியாளர்களின் உத்தரவிற்கேற்ப எல்லாம் நடக்கிறது. அரசாங்கத்தின் உயர் பதவியில் இருப்பவர்களின் கட்டுப்பாட்டில் மொத்த அரசும் இயங்குகிறது. அமித் ஷா தலைவராக உள்ள கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற முறைகேடு குறித்து யார் விசாரணைக்கு உத்தரவிடுவார்கள்.
நீதித்துறையே நெருக்கடியில் இருக்கிறது என்று ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை எதிர்த்து மக்கள் போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.