சென்னை வந்த கொரிய கப்பல்: இந்தியா– தென் கொரியா கூட்டு பயிற்சி
சென்னை: இந்தியா கடற்படையும் - தென்கொரியா கடற்படையினரும் இணைந்து சென்னையில் கூட்டு பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இதற்காக தென்கொரிய கடலோர கடற்படையினருக்கு சொந்தமான கப்பல் ஒன்று சென்னை துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
இந்தியா தனது நேச நாடுகளுடன் ஒவ்வொரு ஆண்டும் கூட்டு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. அதாவது ராணுவங்களுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் கடலோர காவல் படைகளுக்கு இடையே கூட்டு பயிற்சி நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இந்தோ - கொரியா கூட்டு பயிற்சிக்கு கொரியாவில் இருந்து கப்பல் ஒன்று சென்னை வந்துள்ளது. இந்திய - தென்கொரிய கடற்படையினர் கூட்டு பயிற்சி முகாம் வரும் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
‘சகோஜ்-ஹையோ பிளையோக்'என்ற பெயரில் நடைபெறும் இந்த கூட்டு பயிற்சிக்காக கொரியா கடற்படையினர் 73 பேர் சென்னை துறைமுகத்திற்கு வந்தனர். ராணுவ இசை முழங்க இந்திய கடலோர காவல் படையினர் மற்றும் தென்கொரிய தூதரக அதிகாரிகள் கப்பலை வரவேற்றனர்.
இந்தியா தென் கொரியாவிற்கு இடையே உள்ள உறவை மேம்படுத்தவும், சர்வதேச அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும், கூட்டுப்பயிற்சி மூலம் இரு நாட்டு யுக்திகளை அறிந்து கொள்வதற்காக இந்த கூட்டுபயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.