டோர்னியர், ஏஎன்-32.. 5 வருடங்களில் 30 விபத்துகள்.. உயிர் கொல்லும் ராணுவ விமானங்கள்!
சென்னை: விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் ராஜஸ்தான் மாநிலம் பர்மர் பகுதியில் இன்று மதியம் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானிகள் பாராசூட் மூலம் உயிர் தப்பினர். அந்த விமானம் பர்மர் நகரில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள திறந்த வெளி மைதானத்தில் விழுந்து நொறுங்கி தீ பிடித்து எரிந்தது.
இந்திய விமானப்படை விமானங்கள் விபத்தில் சிக்குவது தொடர் கதையாகிவருகிறது. கடந்த ஐந்து வருடங்களில் 30 விபத்துகள் இதுபோல நடந்துள்ளன. பெரும்பாலும் வெளிநாடுகளில் தயாரித்த விமானங்கள்தான் விபத்துக்குள்ளாகியுள்ளன.
விமானங்களை கொள்முதல் செய்யும்போது விமானங்களின் தரத்தை சோதித்தார்களா, அல்லது வேறு ஆதாயங்களுக்காக இவை வாங்கப்பட்டதா என்ற கேள்வியை இந்த விபத்துகள் ஏற்படுத்துகின்றன.
தாம்பரத்திலிருந்து
2016, ஜூலை 22: சென்னை தாம்பரத்தில் உள்ள ராணுவத்தளத்திலிருந்து விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் - 32 விமானம் அந்தமானுக்கு சென்றபோது நடு வழியில் மாயமானது. அந்த விமானத்தில் 29 பேர் சென்றனர். இதுவரை துப்பு கிடைக்கவில்லை.
மிக்-27 போர் விமானம்
2016, ஜூன் 13: ரஷ்ய தயாரிப்பான மிக்-27 வகை போர் விமானம், ராஜஸ்தானின் ஜோத்பூர் விமான தளம் அருகே விழுந்து நொறுங்கியது.
10 வீரர்கள் பலி
2015 டிசம்பர் 22: பீச் சூப்பர் கிங் ஏர் பி-200 வகை விமானம், டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டேக்-ஆப் ஆகிய சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறால் நொறுங்கி விழுந்தது. இதில் 2 பைலட்டுகள் உட்பட 10 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்.
இருவர் சாவு
2015, அக்டோபர் 21: இந்திய ராணுவத்தின் இலகு ரக விமானம், மேகாலயாவில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பைலட் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
காஷ்மீரில் விபத்து
2015, ஆகஸ்ட் 24: மிக்-21 போர் விமானம் ஜம்மு காஷ்மீரில் விழுந்து நொறுங்கியது. அதிருஷ்வசமாக உயிரிழப்பு இல்லை.
பைலட் தப்பினார்
2015, ஜூன் 16: அலகாபாத் மாவட்டத்தில் ஜாகுவார் போர் விமானம் விழுந்து நொறுங்கியது. அதிருஷ்டவசமாக பைலட் உயிரோடு தப்பினார்.
டோர்னியர் விபத்து
2015, ஜூன் 8: தமிழகத்தின் சிதம்பரம் பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் மாயமானது. 35 நாட்கள் தேடுதல் வேட்டை நடத்திய பிறகு, 3 வீரர்கள் உடல் வங்க கடலில் மீட்கப்பட்டது.
தப்பிய பைலட்டுகள்
2015, ஜூன் 3: ஒடிசாவின் மேயுர்பஞ்ச் மாவட்டத்தில், பயிற்சி போர் விமானம் நொறுங்கி விழுந்தது. பைலட்டுகள் பாதுகாப்பாக வெளியேறினர்.
தொடர் கதை
2015 மே 19: அசாமில் சுகாய்-30 வகை விமானம் நொறுங்கி விழுந்தது. அதில் இருந்த இரு விமானிகளும் தப்பினர். டேக்-ஆப் ஆன ஐந்தே நிமிடத்தில் இந்த விபத்து நடந்தது.
இப்படியாக, கடந்த 5 ஆண்டுகளில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான, சுமார் 30 விமானங்கள் நொறுங்கியுள்ளன.