வங்க கடலில் இந்தியா–கொரியா கடற்படையின் கூட்டு கடற்பயிற்சி நாளை தொடங்குகிறது
சென்னை: இந்தியா மற்றும் கொரியா கடற்படையினர் இணைந்து வங்க கடலில் நாளை முதல் 4 நாட்கள் கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையுடன் இணைந்து கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபடுவதற்காக வெளிநாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் இந்தியா வந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கடற்படை வீரர்கள் இந்தியா வந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு சென்றனர்.
தற்போது இந்திய கடற்படையுடன் இணைந்து கொரியா நாட்டு கடலோர காவல் படையினர் 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 4 நாட்கள் வங்க கடலில் சகோஜ்-ஹையோபிளையோக் என்ற பெயரில் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
இதற்காக கொரியா நாட்டில் இருந்து கொரியா கடற்படை கமிஷனர் ஜெனரல் ஹாங்கில்க்-டே தலைமையில், கொரியா கடற்படையினர் கொரியா கடலோர காவல் படை கப்பலில் சென்னை துறைமுகம் வருகின்றனர். அவர்களுக்கு இந்திய கடற்படை சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சிக்கு இந்திய கடலோர காவல்படையின் டைரக்டர் ஜெனரல் ராஜேந்திர சிங் தலைமை தாங்குகிறார். இந்திய கடற்படை வீரர்கள் ஐ.சி.சி. சமுத்திரா பேகேர்டார் போர்க்கப்பலில் சென்று பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இருநாட்டு கப்பல் படைகளின் வலிமையை அதிகரிக்கவும், இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்காகவும் இந்த கடற்பயிற்சி நடத்தப்படுகிறது.
சமூக விழிப்புணர்வுக்காக நாளை மறுநாள் வியாழக்கிழமையன்று கைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. தொடர்ந்து இருநாட்டு வீரர்களும் 2 நாட்டு போர்க்கப்பல்களையும் பார்வையிட உள்ளனர். பின்னர் 11-ந் தேதி இரவு கொரியா நாட்டு கடற்படை வீரர்கள் நாடு திரும்புகின்றனர்.