இந்திய -இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு: அரசு ஒப்புதலுக்கு பின் அறிவிப்பு
சென்னை: இந்திய -இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருநாட்டு அரசு ஒப்புதலுக்கு பின்னர் அது குறித்தான முறையான அறிவிப்பு வெளியாகும் எனவும் பேச்சுவார்த்தையில் பங்கு கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எல்லையை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டப் பட்டு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப் படும் பிரச்சினைக்கு தீர்வு காண, முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதில், இருநாட்டு மீனவ பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அதை சென்னையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதமருக்கு கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து இருநாட்டு மீனவ பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. அதன்படி நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இந்தியா-இலங்கை நாட்டு மீனவ பிரதிநிதிகள் யு.அருளானந்தம், சதாசிவம் ஆகியோர் பதில் அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
பிரச்சினைகள் குறித்து விவாதம்....
கேள்வி:-பேச்சுவார்த்தையில் என்னென்ன கருத்துகள் குறித்து விவாதம் நடத்தினீர்கள்?
பதில்:-இருநாட்டு மீனவர்களும் மீன்பிடிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்தினோம்.
தீர்மானம் நிறைவேற்றம்....
கேள்வி:-கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதா?
பதில்:-ஆம். இருநாட்டு மீனவர்களின் ஆலோசனையை ஏற்று சில தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளோம்.
அரசின் ஒப்புதல்....
கேள்வி:-குறிப்பாக என்ன தீர்மானம் நிறைவேற்றி உள்ளீர்கள்?
பதில்:-என்ன தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்று இப்போது எங்களால் கூறமுடியாது. இருநாடுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே முறைப்படி அறிவிக்க இயலும்.
கச்சத்தீவு அரசுகளின் பிரச்சினை...
கேள்வி:-கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கலாம் என்று கூறப்படுகிறதே?
பதில்:-கச்சத்தீவு இருநாட்டு அரசுகளின் பிரச்சினை. அதுகுறித்து இரு நாட்டு அரசுகள் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். அதற்கு பிறகு மீன்பிடிப்பது தொடர்பாக நாங்கள் முடிவெடுப்போம். இதுதொடர்பாகவும் பேச்சுவார்த்தையில் நாங்கள் பேசினோம். அதுதொடர்பாக விளக்கமாக தற்போது எதுவும் கூறமுடியாது. சர்வதேச எல்லை பற்றி அரசுகள் தான் முடிவுகளை எடுக்க வேண்டும்.
இறுதி முடிவு....
கேள்வி:-மீனவர்களுக்கு வரும் காலங்களில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க முழுமையான முடிவு எடுக்கப்பட்டுள்ளதா?
பதில்:-அரசிடம் எங்கள் முடிவை அனுப்பி ஒப்புதல் பெறுவோம். அரசுகள் நல்ல முடிவுகளை எடுத்து அறிவித்தவுடன், அதனை திரும்ப பெற்று நாங்கள் இறுதி முடிவை அறிவிப்போம்' என இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.